
தீபாவளிப்பண்டிகையையொட்டி வியாபாரத்தை பெருக்க ஒவ்வொரு கடைக்காரர்களும் புதுபுது யுத்திகளை கையாண்டு வருகிறார்கள். அதில் திருச்சியில் ஒரு இனிப்பண்டங்கள் விற்பனை செய்யும் கடைக்காரர், இனிப்புகள் வாங்கினால் ஒரு லிட்டர் பெட்ரோல் அல்லது டீசல் இலவசமாகத் தரப்படும் என விளம்பரம் செய்துள்ளார்.
திருச்சி மாவட்டம், துறையூர் கோவிந்தாபுரத்தில் உள்ள ஒரு கடைக்காரர்தான் இந்த விளம்பரத்தை செய்து, வாடிக்கையாளர்களை ஈர்த்து வருகிறார். இந்த புதுவித விற்பனை யுத்தி குறித்து கடைக்காரர்கள் தரப்பில் கூறுப்படுகையில், “ இதற்கு முன் எங்கள் கடையை நகர்பகுதிக்குள் வைத்து இருந்தோம். சமீபத்தில் கடையை மாற்றி நகரத்தின் நுழைவாயிலில் வைத்துள்ளோம். இதனால், வாடிக்கையாளர்கள் எங்கள் கடைக்கு வந்து இனிப்பு, காரங்கள் வாங்க வேண்டுமானால், 5 கி.மீ வரை தங்களின் வாகனங்களில் பயணிக்க வேண்டும். இதற்கு அவர்களுக்கு பெட்ரோல், டீசல் தனியாக செலவாகும்.
மேலும், நகரின் புறநகரில் கடை அமைந்துள்ளதால், வாடிக்கையாளர்கள் தங்களின் வாகனங்களை நன்றாக நிறுத்த இடம் தரப்பட்டு, அமைதியான சூழலில் கடை அமைந்துள்ளது. எங்கள் கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் பெட்ரோல், டீசல் செலவு செய்துவருவதை பார்த்து, ரூ.1000க்கு மேல் இனிப்பு, காரங்கள் வாங்குபவர்களுக்குஒரு லிட்டர் பெட்ரோல், அல்லது டீசலை இலவசமாகத் தருகிறோம்’’ என்றனர்.
இந்த கடையில் ரூ.1000க்கு மேல் இனிப்புகள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு டோக்கன் தரப்படுகிறது. அதை குறிப்பிட்ட பெட்ரோல் நிலையங்களில் கொடுத்து தங்களுக்கு தேவையான பெட்ரோல், அல்லது டீசலை ஒரு லிட்டர் பெற்றுக்கொள்ளலாம். இதற்காக குறிப்பிட்ட பெட்ரோல் நிலையத்துடன் ஸ்வீட் கடைக்காரர்கள் ஒப்பந்தம் செய்துள்ளனர். இந்த சலுகை வரும் 20-ந்தேதி வரைதான் என்று கடைக்காரர்கள் தரப்பில் கூறப்பட்டது.