கள்ள உறவுக்கு இடையூறாக இருந்ததால் கணவன் ஈவு இரக்கமின்றி கொலை; மனைவி, கள்ள காதலனுக்கு சிறை...

First Published Apr 27, 2018, 8:19 AM IST
Highlights
Husband killed for disturbing illegal relationship Wife and illegal lover imprisoned


வேலூர்
 
கள்ள உறவுக்கு இடையூறாக இருந்ததால் கணவரை சார்ஜர் ஒயரால் கழுத்தை இறுக்கி கொலை செய்த மனைவி மற்றும் அவரது கள்ள காதலனுக்கு ஆயுள் தண்டனை விதித்து வேலூர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்தது.

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் தாலுகா பட்டரைபள்ளி சின்னராமனூரைச் சேர்ந்தவர் சோமசுந்தரம் (37), விவசாயியான இவருடைய மனைவி கஸ்தூரி (36). இவர்களுக்கு மூன்று மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். 

இந்த நிலையில் கஸ்தூரிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த மிட்டாய் கடையில் வேலைப் பார்த்த கோவிந்தராஜிக்கும் (36) இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ள உறவாக மாறியது.

இதனையறிந்த சோமசுந்தரம் தனது மனைவியை கண்டித்துள்ளார். இதுதொடர்பாக கணவன்  -  மனைவி இடையே அடிக்கடி தகராறும் ஏற்பட்டுள்ளது. 

தங்களது கள்ள உறவுக்கு இடையூறாக இருந்ததால் சோமசுந்தரத்தை கொலை செய்ய கஸ்தூரியும், கோவிந்தராஜும் திட்டம் தீட்டினர்.

அதன்படி, கடந்த 2013-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 3-ஆம் தேதி வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே உள்ள சித்தாத்தூர் கும்மாத்தம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வரலாம் என்று கூறி சோமசுந்தரத்தை, கஸ்தூரி அழைத்து சென்றார். கணவன் - மனைவி இருவரும் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.

பின்னர் அருகே ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் சோமசுந்தரம் குடித்துவிட்டு போதையில் இருந்த சமயம் திட்டமிட்டபடி அங்கு வந்த கோவிந்தராஜ், கஸ்தூரியுடன் சேர்ந்து செல்போன் சார்ஜர் வயரால் சோமசுந்தரத்தின் கழுத்தை இறுக்கி கொலை செய்தார்.

இது தொடர்பாக குடியாத்தம் தாலுகா காவலாளர்கள் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு கோவிந்தராஜையும், கஸ்தூரியையும் கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தனர்.

இதுதொடர்பான வழக்கு விசாரணை வேலூர் முதலாவது கூடுதல் மற்றும் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கின் இறுதி விசாரணை நேற்று நடந்தது. 

அதைத் தொடர்ந்து நீதிபதி வெற்றிசெல்வி தீர்ப்பு கூறினார். அதில், "கள்ள உறவில் கணவர் சோமசுந்தரத்தை கொலை செய்த அவரது மனைவி கஸ்தூரி மற்றும் கள்ளக் காதலன் கோவிந்தராஜ் இருவருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.6000 அபராதமும் விதித்து" தீர்ப்பு அளித்தார்.

இதனையடுத்து பலத்த காவல் பாதுகாப்புடன் இருவரும் அழைத்து செல்லப்பட்டு கோவிந்தராஜ் வேலூர் ஆண்கள் மத்திய சிறையிலும், கஸ்தூரி பெண்கள் மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டனர்.  
 

click me!