தருமபுரி
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடியாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து உயர்ந்துள்ளது. இதனால் பரிசல்களில் செல்ல 6-வது நாளாக தடை தொடர்கிறது.
ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு நேற்று முன்தினம் காலை நீர்வரத்து வினாடிக்கு 20 ஆயிரம் கன அடியாகவும், மாலையில் 12 ஆயிரம் கன அடியாகவும் இருந்தது.
இந்த நிலையில் தமிழக - கர்நாடக எல்லைப் பகுதிகளில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வருவதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்தது.
ஒகேனக்கல்லில் உள்ள அருவிகளில் தண்ணீர் ஆராவாரமாய் கொட்டியது. நீர்வரத்து மீண்டும் கூடியதால் பரிசல்களை இயக்க விதிக்கப்பட்ட தடை நேற்று 6-வது நாளாக நீட்டிக்கப்பட்டது.
நீர்வரத்து அதிகரித்துள்ளதால் காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் குளிப்பதை சுற்றுலாப் பயணிகள் தவிர்க்குமாறு காவலாளர்கள் கேட்டுக்கொண்டனர்.
ஒகேனக்கல்லுக்கு நேற்று திரண்டுவந்த சுற்றுலாப் பயணிகளில் பலர் எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு பிரதான அருவியில் கொட்டிய தண்ணீரில் குளித்தனர்.
மேலும் தொங்கு பாலத்திற்கு சென்று ஒகேனக்கல்லின் இயற்கை அழகை ரசித்து மகிழ்ந்தனர்.
தமிழக - கர்நாடக எல்லைப் பகுதியான பிலிகுண்டுலு பகுதியில் காவிரி ஆற்றில் நீர்வரத்தின் அளவை மத்திய நீர்வளத்துறையினர் அளவீடு செய்தனர். மேலும், காவலாளர்கள் தொடர் கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.