சென்னை காவல்துறை கமிஷனர் ஜார்ஜ் வரும் 27ம் தேதி கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் கடும் உத்தரவை பிறப்பித்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 2016ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜாமீன் மனு மீதான விசாரணை, நீதிபதி வைத்தியநாதன் முன்பு நடைபெற்றது.
அப்போது, மத்திய குற்றப்பிரிவில் (சி.சி.பி.) 2011ம் ஆண்டு வரை பல வழக்குகள் முடிக்கப்படாமலும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமலும் கிடப்பில் உள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, இந்த வழக்குகளின் நிலை குறித்த அறிக்கையை அளிக்கும்படி மத்திய குற்றப்பிரிவுக்கு நீதிபதி உத்தரவிட்டார். மேலும், நிலுவையில் உள்ள குற்ற வழக்கு விசாரணையை 2 மாதத்தில் முடிக்க அனைத்து காவல் நிலையங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்.
அந்த வழக்குகளின் நிலை, குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கும் காவல்துறையில் உள்ள கறுப்பு ஆடுகளுக்கும் இடையே உள்ள தொடர்பு குறித்து உயர்நீதிமன்ற தலைமை பதிவாளருக்கு கமிஷனர் ஜார்ஜ் அறிக்கை அனுப்ப வேண்டும்.
அதுகுறித்து, 4 மாதத்துக்குள் அறிக்கையை தாக்கல் செய்யாவிட்டால் உயர்நீதிமன்றத்தில் காவல்துறை ஆணையர் நேரில் ஆஜராகி வாய்மொழியாகவும், எழுத்துப்பூர்வமாகவும் விளக்கமளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்.
இந்த வழக்கில், சென்னை கமிஷனர் ஜார்ஜிக்கு உயர்நீதிமன்றம் வழங்கிய காலஅவகாசம் கடந்த டிசம்பருடன் முடிவடைந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. ஆனால், கமிஷனர் ஜார்ஜ், நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. மேலும், கமிஷனர் சார்பிலான அறிக்கை, தாமதமாக தாக்கல் செய்யப்பட்டது.
இதற்கு நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்தார். இதைதொடர்ந்து வழக்கை வரும் 27ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, அன்றைய தினம், கமிஷனர் ஜார்ஜ் கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார்.