
காஞ்சிபுரத்தில் சாராயம் குடிக்க மனைவி காசு தராததால், அரளி விதையை அரைத்து குடித்து கணவர் தற்கொலை செய்து கொண்டார்.
காஞ்சிபுரத்தை அடுத்த புத்தேரி கிராமத்தைச் சேர்ந்த பெயிண்டர் ராஜா (35). இவருக்கு குடிக்கும் பழக்கம் இருக்கிறது.
தினமும் குடிப்பதை ஒரு வேலையாக வைத்திருப்பதால், ராஜா தன்னிடம் பணம் இல்லாத சமயத்தில் தனது மனைவியிடம் காசு வாங்கி குடிப்பதை வழக்கமாக வைத்திருந்தார்.
இந்த நேரத்தில், சம்பவத்தன்று, குடிப்பதற்காக தனது மனைவி கோமதியிடம் பணம் கேட்டுள்ளார். அதற்கு அவரது மனைவி தனக்கு குடும்ப செலவுகள் இருப்பதாலும், இந்த பணத்தை வைத்து தான் இன்னும் சில வாரங்கள் ஓட்ட வேண்டும் என்று கூறி பணம் தர மறுத்துவிட்டார்.
இதனால், மனவேதனை அடைந்த ராஜா இன்று குடிக்க முடியாது என்பதை எண்ணி எண்ணி, ஒரு கட்டத்தில் அரளி விதையை அரைத்து குடித்துவிட்டார்.
தனது அறையில் ராஜா மயங்கி கிடப்பதை பார்த்த, அவரது மனைவி அக்கம்பக்கத்தினரை அழைத்து அவரை காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சைப் பலனின்றி ராஜா பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்தத் தற்கொலை குறித்து காஞ்சிபுரம் தாலுகா சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
உயிரிழந்த ராஜாவுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர்.