யுனெஸ்கோவில் தமிழ் கலாச்சாரத்திற்கு ஒரு சிறப்பான இடம் கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் தமிழகத்தில் இருப்பதில் பெருமை கொள்வதாகவும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் அங்கமான யுனெஸ்கோ அமைப்பு கைவினைப் பொருள்கள் மற்றும் நாட்டுப்புறக் கலை, நகர வடிவமைப்பு, திரைப்படம், கேஸ்ட்ரானமி இலக்கியம், ஊடகக் கலை மற்றும் இசை என 7 பிரிவுகளில் சிறப்பான பங்களிப்பு கொடுக்கும் நகரங்களை கிரியேட்டிவ் சிட்டீஸ் என்ற அடைமொழியுடன் அங்கீகாரம் அளிக்கப்பட்டு வருகிறது.
கடந்த 2004-ம் ஆண்டு முதல் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நகரங்களை இந்தப் பட்டியலில் இணைத்து யுனெஸ்கோ அமைப்பு ஊக்கப்படுத்தி வருகிறது.
அதன்படி, பாரம்பரிய இசைக்கு சென்னை அளித்து வரும் பங்களிப்பைக் கௌரவிக்கும் வகையில் கிரியேட்டிவ் சிட்டீஸ் பட்டியலில் சென்னையையும் யுனெஸ்கோ அமைப்பு சேர்த்தது.
இந்தாண்டில் சென்னையுடன் சேர்த்து நகர வடிவமைப்புக்காகத் துபாய், இலக்கியத்துக்காகத் தென்னாப்பிரிக்காவின் டர்பன் உள்ளிட்ட 64 நகரங்கள் யுனெஸ்கோவின் கிரியேட்டிவ் சிட்டீஸ் பட்டியலில் புதிதாக இணைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், யுனெஸ்கோவில் தமிழ் கலாச்சாரத்திற்கு ஒரு சிறப்பான இடம் கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் தமிழகத்தில் இருப்பதில் பெருமை கொள்வதாகவும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார்.