நாகை, கடலூர், ராமநாதபுரத்தில் முழு அலர்ட்... 8 அடிக்கு கடல் உள்வாங்கியதால் பரபரப்பு

By vinoth kumarFirst Published Nov 15, 2018, 5:31 PM IST
Highlights

சுனாமிக்கு பிறகு முதல் முறையாக புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைபட்டினத்தில் 8 அடி அளவுக்கு கடல் தற்போது உள்வாங்கியுள்ளது. கனமழை கஜா புயலை தொடர்ந்து புதுச்சேரி , நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் மற்றம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

கஜா புயல் காரணமாக, கடலூர், நாகை, ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் முழு அலர்ட்டில் வைக்கப்பட்டு உள்ளது. கஜா புயல் இன்று இரவு கடலூர் அருகே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஏற்பாடு குறித்து, புயல் கண்காணிப்பு அலுவலர் சந்திரமோகன், கலெக்டர் வீரராகவராவ் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

புயல் முன்னெச்சரிக்கை தொடர்பாக அவர்கள் கூறுகையில், கஜா புயல் இரவு 8 மணிக்கு மேல் கரையை கடக்கலாம் என்பதால், ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம், வேம்பாறு, கீழக்கரை, ஏர்வாடி, சிக்கல், மூக்கையூர், சாயல்குடி, தேவிப்பட்டினம், தொண்டி, தம்புதாழை, வேதாளை, தனுஷ்கோடி , அரிச்சல்முனை, திருப்பாலைக்குடி உள்ளிட்ட 180 கடலோர கிராமங்கள் முழு கண்காணிப்பில் உள்ளன. 

23 காப்பகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் சுமார் 30 ஆயிரம் பேர் தங்க முடியும். குடிநீர், உணவு, மற்றும் நிவாரண பொருட்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.  1,520 விசைப்படகுகள், 5 ஆயிரம் நாட்டுப்படகுகள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மரங்கள் , மின்கம்பங்கள் சாய்ந்தால் , மீட்பு பணியில் ஈடுபடுத்த 140 பொக்லைன் இயந்திரங்கள், 90 பம்புசெட்டுகள், தயார் நிலையில் உள்ளன. ஒவ்வொரு கிராமங்களிலும், கிராம நிர்வாக அலுவலர், அங்கன்வாடி ஊழியர் போலீசார் ஆகியோர் கொண்ட 40 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

கடல் அமைதியாக இருப்பதால் யாரும் அலட்சியமாக இருக்க வேண்டாம். நவபாஷணம் கோயில் மூடப்பட்டுள்ளது என்றனர். இதற்கிடையில், இன்று மதியம் சுமார் 1.45 க்கு மேல் ராமேஸ்வரத்தில் இருள் சூழ்ந்தது. லேசான மழையும் பெய்ய துவங்கியுள்ளது. மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்படுகிறது. மின்இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதால், மக்கள் கடும் சிரமம் அடைந்துள்ளனர்.

சுனாமிக்கு பிறகு முதல் முறையாக புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைபட்டினத்தில் 8 அடி அளவுக்கு கடல் தற்போது உள்வாங்கியுள்ளது. கனமழை கஜா புயலை தொடர்ந்து புதுச்சேரி , நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

click me!