புத்தாண்டு அன்று பட்டாசு வெடிக்க கூடாது... வனத்துறை அதிரடி அறிவிப்பு... எங்கு, ஏன்?

By Narendran SFirst Published Dec 28, 2021, 9:09 PM IST
Highlights

நீலகிரி மாவட்டம் புலிகள் காப்பக பகுதியில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. முதுமலை புலிகள் காப்பகத்தை ஒட்டி உள்ள தங்கும் விடுதிகளில் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு பட்டாசு வெடிப்பதற்கு தடை விதித்து வனத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. 

நீலகிரி மாவட்டம் புலிகள் காப்பக பகுதியில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. முதுமலை புலிகள் காப்பகத்தை ஒட்டி உள்ள தங்கும் விடுதிகளில் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு பட்டாசு வெடிப்பதற்கு தடை விதித்து வனத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. நீலகிரி மாவட்டத்திற்கு தினம்தோறும் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். அதிலும் குறிப்பாக புத்தாண்டு விடுமுறையின் போது அதிகளவில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகை புரிவர். புத்தாண்டை கொண்டாட வரும் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் வனங்களுக்கு செல்கின்றனர். அங்கு தீ மூட்டுவது, மது அருந்திவிட்டு ஆடி பாடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை தவிர்க்க வனத்துறை வலியுறுத்தி வருகிறது. இருப்பினும், சில சுற்றுலா பயணிகள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதால், விலங்குகளுக்கு பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன. நீலகிரி வடக்கு வனக்கோட்டத்திற்குட்பட்ட சிங்காரா, மாயார், மசினகுடி, சிறியூர் மற்றும் பொக்காபுரம் பகுதிகளில் ரிசார்ட்டுகள் மற்றும் காட்டேஜ்கள் உள்ளன.

இங்கு புத்தாண்டை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதனால், சுற்றுலா பயணிகள் அதிகளவில் வர வாய்ப்புள்ளது. ஆண்டு தோறும், மசினகுடி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் புத்தாண்டை கொண்டாட ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இது போன்ற சமயங்களில் சில ரிசார்ட்டுகள் மற்றும் காட்டேஜ்களில் தங்கியிருக்கும் சுற்றுலா பயணிகள் அத்துமீறுவது வழக்கம். தற்போது, பெரும்பாலான காட்டேஜ் மற்றும் ரிசார்ட்டுகள் மூடப்பட்ட போதிலும், ஒரு சில விடுதிகள் இயங்கி வருகிறது. எனவே, இதுபோன்ற பகுதிகளில் உள்ள ரிசார்ட்டுக்கள் மற்றும் காட்டேஜ்களில் அதிக சத்தத்துடன் கூடிய பட்டாசுகள் வெடிக்கவும், வாண வேடிக்கை நிகழ்ச்சிகள் நடத்தவும் வனத்துறை தடை விதித்துள்ளது. இது குறித்து பேசிய முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் அருண், பொக்காபுரம், மாவனல்லா, வாழைத்தோட்டம் போன்ற பகுதிகளில் உள்ள தனியார் ரிசார்ட்டுக்களில் புத்தாண்டு தினத்தன்று பட்டாசுகள் வெடிக்கக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேபோல், அதிக சத்தத்துடன் எந்த ஒரு நிகழ்ச்சிகளையும் நடத்தக் கூடாது. வனத்திற்குள் வாகனங்களை கொண்டு செல்லக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சாலைகளில் வன விலங்குகளை துன்புறுத்தும் வகையில் வாகனங்களை வேகமாக ஓட்டக்கூடாது. விலங்குகளுக்கு உணவு கொடுக்கவும், வனப்பகுதியில் புகைப்பிடிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது, பனியின் காரணமாக வனங்கள் காய்ந்துள்ள நிலையில், புத்தாண்டை கொண்டாட வரும் சுற்றுலா பயணிகள் தீ மூட்டினால் எளிதில் வனங்களுக்கு பரவும் அபாயம் நீடிக்கிறது. எனவே, இதனை கண்காணிக்க வன ஊழியர்கள் ரோந்து பணிகளை மேற்கொள்வார்கள். அத்துமீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வனங்களை ஒட்டிய சாலைகளில் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் புத்தாண்டு கொண்டாட்டத்தை தவிர்க்க துண்டு பிரசுரங்களும் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். 

click me!