ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு சின்னாற்றில் வெள்ளப்பெருக்கு; விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி…

First Published Oct 6, 2017, 8:49 AM IST
Highlights
Flood in Chinna after five years Farmers are very happy ...


தருமபுரி

இரண்டு நாள்களாக பெய்து வரும் தொடர் மழையால் ஐந்து ஆண்டுகளுக்கு சின்னாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தருமபுரி மாவட்டம், சின்னாற்றிற்கு தண்ணீர் வரும் பாலக்கோடு, மாரண்டஅள்ளி, பஞ்சப்பள்ளி பகுதிகளில் கடந்த ஐந்து ஆண்டுகளாக பருவமழை பொய்த்து கடுமையான வறட்சி நிலவியது. இதனால் அந்தப் பகுதிகளில் இருக்கும் கிணறுகள், ஏரிகள், நீர்நிலைகள் அனைத்தும் வறண்டன.

மேலும், சின்னாற்றில் முட்புதர்கள் முளைத்து புதர் மண்டி காணப்பட்டதால் சின்னாற்றை தூர்வாரி முட்புதர்களை அகற்ற வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

இந்த நிலையில், மாரண்டஅள்ளி, பஞ்சப்பள்ளி, பாலக்கோடு மற்றும் ஒகேனக்கல் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாள்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் சின்னாற்றிற்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

கடந்த இரண்டு நாள்களாக தொடர் மழை பெய்ததால் ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு சின்னாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

சின்னாற்றில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர் ஒகேனக்கல் மீன் சந்தைப் பகுதியில் காவிரி ஆற்றில் கலக்கிறது.

வறண்டுக் கிடந்த சின்னாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதை ஒகேனக்கல்லுக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் மற்றும் மக்கள் ஆர்வத்துடன் கண்டு களித்தனர்.

மேலும், சின்னாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். 

click me!