நடுக்கடலில் தமிழக மீனவர் சுட்டுக் கொலை…இலங்கை கடற்படையினர் வெறியாட்டம்..

First Published Mar 7, 2017, 5:51 AM IST
Highlights
fisherman shot dead


நடுக்கடலில் தமிழக மீனவர் சுட்டுக் கொலை…இலங்கை கடற்படையினர் வெறியாட்டம்..

இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் ராமேஸ்வரம் மீனவர் பிரிட்ஜோ எனபவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்வது தொடர்கதையாகி வருகிறது.அத்துடன் இலங்கை கடற்படையினர் மீனவர்களின் வலைகளை அறுத்தும் , படகுகளையும் சேதப்படுத்தியும் கொடுஞ்செயலலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் மீனவர்கள் மிகுந்த அச்சத்துடனேயே கடலுக்கு சென்று மீன் பிடித்து வருகின்றனர்.

திமுக, அதிமுக, காங்கிரஸ், பா.ஜ.க. என எந்த கட்சியாலும், அரசாங்கத்தாலும் இந்த மீனவர்கள் பிரச்சனைக்கு இதுவரை நிரந்தர தீர்வு காணப்படவில்லை.


இந்நிலையில் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த டிட்டோ என்பவருக்கு சொந்தமான படகில் 6 பேர் நேற்று அதிகாலை கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.

இந்திய கடல் எல்லையில் ஆதம்பாலம் பகுதியில்அவர்கள்  மீன்பிடித்து கொண்டிருந்த போது  அவ்வழியாக ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். மேலும் கையெறி குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர்.

 

இதில், ராமேஸ்வரம் தங்கச்சிமடத்தை சேர்ந்த பிரிட்ஜோ என்ற மீனவர்  கழுத்தில் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொரு மீனவர் சரோன் படுகாயமடைந்தார்.

இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் அச்சமடைந்த மற்ற மீனவர்கள் உடனடியாக கரை திரும்பினர்.

இலங்கை கடற்படையினரின் இந்த கொடூர தாக்குதல் குறித்த தகவல் அறிந்ததும் ராமநாதபுரம் பகுதி மீனவ கிராமங்களில் பதற்றம் நிலவி வருகிறது.

கொந்தளித்துப் போயுள்ள மீனவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

இதனிடையே துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட மீனவர் பிரிட்ஜோ வின் உடலுடன் மீனவர்கள் நள்ளிரவு கரை திரும்பினர். படுகாயமடைந்த சரோன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.


இலங்கை கடற்படையினர்  அவ்வப்போது தமிழக மீனவர்களை கைது செய்தல், தாக்குதல் நடத்துதல் உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபட்டு வந்தாலும்  கடந்த 5 ஆண்டுகளாக உயிரிழப்புகள் ஏதும் நிகழவில்லை. ஆனால் தற்போது துப்பாக்கி சூட்டில் மீனவர்  ஒருவர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கடலில் ரோந்து வருவதைப் போன்று, இந்திய கடற்படையினர் ரோந்து வருவதில்லை என்று குற்றம் சாட்டியுள்ள மீனவர்கள், எல்லை தாண்டி மீன் பிடிக்காத போதும் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவது எந்த விதத்தில் நியாயம் என கேள்வி எழுப்பியுள்ளனர்,

விலங்குகள் மீது காட்டும் அக்கறைக் கூட இந்திய அரசு மனிதர்கள் மீது காட்டுவதில்லை என குற்றம் சாட்டும் மீனவர்கள், தண்ணீரிலும், கண்ணீரிலும் வாழ்வைத் தொலைத்து நிற்கும் தங்களுக்கு நிரந்தர தீர்வு எப்போது கிடைக்கும் என ஏங்கித் தவித்து வருகின்றனர்…

click me!