பயங்கர சத்தத்தோடு வெடித்த பட்டாசு ஆலை; ஒருவர் பரிதாபமாக பலி; சோகத்தில் மூழ்கிய மக்கள்...

By Suresh ArulmozhivarmanFirst Published Aug 16, 2018, 11:40 AM IST
Highlights

விருதுநகரில் இயங்கி வந்த பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் இருவர் படுகாயம் அடைந்தனர். இதில், ஒருவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். 

விருதுநகரில் இயங்கி வந்த பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் இருவர் படுகாயம் அடைந்தனர். இதில், ஒருவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவத்தால் இப்பகுதி மக்கள் பெரும் சோகத்தில் உள்ளனர்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகேவுள்ளது பெத்துலுப்பட்டி. இங்கு ஜான்பாக்கியம் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வருகிறது. இங்கு பள்ளப்பட்டி ஆரோக்கியராஜ், சிவகாந்தி நகர் முருகன் ஆகியோர் வேலை செய்தனர்.

கடந்த 13-ஆம் தேதி பட்டாசு தயாரிக்கப் பயன்படுத்தப்படும் மருந்து இருந்த அறையை தொழிலாளர்களான ஆரோக்கியராஜ் மற்றும் முருகன் திறந்தனர். அப்போது மருந்தில் உராய்வு ஏற்பட்டு பலத்த சத்தத்தோடு பட்டாசு ஆலை வெடித்தது. 

இந்த வெடி விபத்தில் தூக்கிவீசப்பட்ட இருவரும் படுகாயம் அடைந்தனர். இதனைப் பார்த்து ஓடிவந்த கிராம மக்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து நெருப்பை அணைக்கும் முயற்சியில் இறங்கினர். அங்கிருந்து ஆரோக்கியராஜ் மற்றும் முருகனை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதில், ஆரோக்கியராஜ் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். சிவகாசி அரசு மருத்துவனையில் சிகிச்சைப் பெற்றுவந்த முருகன் நேற்று சிகிச்சைப் பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விபத்து குறித்து வழக்குப்பதிந்த சிவகாசி காவலாளர்கள் வழக்குப்பதிந்து இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.

பட்டாசு ஆலை வெடித்ததில் படுகாயம் அடைந்தவர் சிகிச்சைப் பலனின்றி இறந்த சம்பவம் இந்தப் பகுதி மக்களிடையே பரவி பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

click me!