
மதுரை
நான்கு வழிச்சாலை அமைக்க விவசாய நிலங்களை கையகப்படுத்துவதை விட்டுவிட்டு வேறு மாற்றுப் பாதையை தேர்வு செய்து கொள்ளுங்கள் என்று விவசாயிகள் திட்டவட்டமாக தெரிவித்துனர்.
மதுரை மாவட்டம், வாடிப்பட்டியில் இருந்து தாதம்பட்டி, கொண்டயம்பட்டி சின்ன இலந்தைகுளம், கல்லணை, பனைகுடி வழியாக தாமரைபட்டிவரை சுமார் 33 கிலோ மீட்டர் தொலைவுக்கு புதிதாக நான்கு வழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த சாலை அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இதுகுறித்து கருத்து கேட்பு கூட்டம் மதுரை ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று நடந்தது.
இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அதிகாரி குணாளன் தலைமை வகித்தார். இதில் விவசாய சங்க பிரதிநிதிகள், அதிகாரிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள், "நான்கு வழிச் சாலைக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள பகுதியில் பெரியாறு பாசன விவசாய நிலங்கள் உள்ளன. இந்தப் பகுதியில் 700 ஏக்கர் விளை நிலங்கள், நூற்றுக்கணக்கான பாசன கிணறுகள் அழிக்கப்படும். அதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். விவசாய நிலங்களை கையகப்படுத்துவதை விட்டுவிட்டு வேறு மாற்றுப் பாதையை தேர்வு செய்து கொள்ளுங்கள்" என்று திட்டவட்டமாக தெரிவித்தனர்.
இதனை ஏற்க மறுத்தும், நான்கு வழி சாலை குறித்து விளக்க வருவாய் அதிகாரி முற்பட்டதாலும் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து விவசாயிகள் பலர் வெளிநடப்பு செய்தனர்.