
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே துலுக்கமுத்தூர் ஊராட்சி ஊஞ்சப்பாளையம் கிராமத்தில் தோட்டத்து வீட்டில் தம்பதியர் பழனிசாமி (84), அவரின் மனைவி பர்வதம் (70) வசித்து வந்தனர். இவர்களது மகன், மகள் இருவரும் திருமணமாகி வெவ்வேறு பகுதியில் வசித்து வருவதால் தோட்டத்து வீட்டில் வயதான தம்பதி மட்டும் தனியாக வசித்து வந்தனர். இந்நிலையில் இன்று காலை நீண்ட நேரம் ஆகியும் தம்பதி வீட்டில் இருந்து வெளியில் வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த பக்கத்து தோட்டத்துக்காரர் அவர்களது வீட்டுக்குச் சென்று பார்த்துள்ளனர். அப்போது தம்பதி இருவரும் ரத்த வெள்ளத்தில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தனர்.
இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த இரட்டை கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் நேற்று ஆடு, கோழி மேய்வது தொடர்பான பிரச்சனையில் உறவினர் ரமேஷ் இருவரையும் கொலை செய்தது தெரியவந்ததை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் தமிழகத்தில், சிறிதும் பயமின்றி வீடு புகுந்து கொலை செய்யும் அளவுக்குச், சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து கிடக்கிறது என அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே உள்ள ஊஞ்சப்பாளையம் கிராமத்தில் வசித்து வந்த வயதான விவசாயத் தம்பதியினர் படுகொலை செய்யப்பட்டுள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
இதையும் படிங்க: திமுகவின் சகுனி அமைச்சர் சேகர்பாபு! பாஜக, அண்ணாமலையை விமர்சிக்க தகுதியில்லை! சொல்வது யார் தெரியுமா?
கடந்த ஆண்டு நவம்பர் மாதம், இதே பகுதியில் உள்ள சேமலைகவுண்டம்பாளையத்தில், தாய், தந்தை, மகன் என மூன்று பேர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், குற்றவாளிகளை இன்னும் கைது செய்யவில்லை. கடந்த 2023 ஆம் ஆண்டும், பல்லடம் பகுதியில், இதே போன்று வீட்டில் புகுந்து ஒரே குடும்பத்தில் நான்கு பேர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் நடந்தது. தொடர்ந்து இதே பகுதியில், தனியாக வசித்து வருபவர்கள் படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர். பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள். ஆனால், தமிழக அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது என்பது தெரியவில்லை.
தமிழகத்தில், சிறிதும் பயமின்றி வீடு புகுந்து கொலை செய்யும் அளவுக்குச், சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து கிடக்கிறது. பொதுமக்கள் பாதுகாப்பு கேள்விக்குரியதாக இருக்கிறது. பாலியல் குற்றங்கள், படுகொலைகள், போதைப்பொருள் புழக்கம், கொள்ளை என, வாழத்தகாத மாநிலமாகத் தமிழகம் மாறிக் கொண்டிருக்கிறது. ஆனால், காவல்துறைக்குப் பொறுப்பான முதலமைச்சரோ, கனவுலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
இதையும் படிங்க: முதல் மொழி ஆங்கிலம், இரண்டாவது பிரெஞ்ச்.! வெளங்கிடும்- பிடிஆரை விடாமல் துரத்தும் அண்ணாமலை
உங்களால் படுகொலைகளையும் தடுக்க முடியவில்லை. குற்றவாளிகளையும் கைது செய்ய முடியவில்லை. திமுக அரசினால் கைகள் கட்டப்பட்டுள்ள காவல்துறை மீது பொதுமக்கள் முற்றிலுமாக நம்பிக்கை இழந்து விட்டார்கள். சேமலைகவுண்டம்பாளையம் மூன்று பேர் கொலை செய்யப்பட்ட வழக்கை, சிபிஐக்கு மாற்றக் கோரி, முதலமைச்சருக்குக் கடிதம் எழுதியிருந்தோம். இந்த அனைத்துக் கொலை வழக்குகளையும், சிபிஐ விசாரணைக்கு மாற்றினால்தான், தமிழகத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என அண்ணாமலை காட்டமாக கூறியுள்ளார்.