
கைலாசா நாட்டில் நித்யானந்தா
தனது பேச்சு திறமையால் மக்களை மயக்கியவர் நித்யானந்தா.. திருவண்ணாமலையில் ஆசிரமத்தை தொடங்கிய நித்யானந்தா உலகம் முழுவதும் பல நாடுகளில் தனது ஆசிரம கிளையை தொடங்கினார். பிரபல நடிகையுடன் ஒன்றாக இருப்பது போல் வெளியான வீடியோவால் மேலும் பிரபலமடைந்தார். இது மட்டுமில்லாமல் நித்யானந்தா ஆசிரமத்தில் பாலியல் புகார்களும் எழுந்த காரணத்தால் வழக்கு பதிவு செய்து சிறையிலும் நித்யானந்தா அடைக்கப்பட்டார். இதனையடுத்து சிறிது காலம் மதுரை ஆதினத்தில் தங்கியிருந்தவர் மதுரை ஆதினத்தை கைப்பற்றவும் முயற்சி செய்தார் இந்த பரபரப்புக்கு மத்தியில் கைலாசா என்கிற நாட்டை உருவாக்கியுள்ளாதாக நித்யானந்தா அறிவித்தார். இந்த நாட்டிற்கான பணத்தையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.
சாப்பிடவும் -தூங்கவும் முடியவில்லை
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக நித்யானந்தா பற்றி தகவல் வெளியாகாத நிலையில் உடல் நிலை பாதிக்கப்பட்டு நித்யானந்தா இறந்து விட்டதாக தகவல் பரவியது. இதனை மறுத்து நித்யானந்தா தான் கைப்பட எழுதிய கடிதம் ஒன்றை வெளியிட்டார். அதில் தனக்கு உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தன்னை 27 பேர் கொண்ட மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும் கூறியிருந்தார். மேலும் தனக்கு புற்று நோய் அல்லது கட்டி எதுவும் இல்லை, இதய பிரச்சினை எதுவும் இல்லை. கொழுப்பு, கல்லீரல் பிரச்சினை, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் என எந்த பிரச்சினையும் இல்லை என கூறியுள்ளார். இருந்த போதும் என்னால் உணவு உட்கொள்ள முடியவில்லை. நான் எந்த உணவையும் வாயில் தள்ள முயன்றால் சில நிமிடங்களில் வாந்தி எடுக்கும் நிலை உள்ளதாகவும், இதே போல எனக்கு உறக்கமும் இல்லாமல் இருப்பதாக தெரிவித்துள்ளார். உடலில் எந்த அசைவும் நிகழவில்லையென கூறியுள்ளவர், நித்ய சிவ பூஜைக்கு மாறாக நிர்விகல்ப சாமாதியில் இருப்பதாக தெரிவித்துள்ளார். மனது உலகை மறந்து விட்டதாகவும், 6 மாதமாக உணவும், உறக்கம் இல்லாமல் இருப்பது நிர்வி கல்ப சமாதியில் இருப்பது தனக்கு பலக்கமான ஒன்று என கூறியுள்ளார்.
செல்ஃபி அனுப்புங்கள்-நித்யானந்தா
எனவே தனக்கு அனைத்து கிரகங்களுப் சாதகமான நிலையில் இருப்பதால் உடல்நிலை பற்றி தனது கவலைப்பட தேவையில்லையென தெரிவித்திருந்தார். இந்த தகவல் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் தற்போது புது தகவலை தனது முகநூல் பக்கத்தில் நித்யானந்தா வெளியிட்டுள்ளார். அதில், தனது உடல்நிலை பாதிப்பு தொடர்பான தகவல் வெளியான நாளில் இருந்து பணம் வந்து கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார். தயவு செய்து பணம் அனுப்பவதை நிறுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். பணத்திற்கு பதிலாக அருணகிரி யோகீஸ்வரர் படத்திற்கு முன் விளக்கு ஏற்றி வழிபாடு செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் விளக்கு ஏற்றும் படத்தை செல்பி எடுத்து பதிவிடுமாறும் வலியுறுத்தியுள்ளார். இதனை பார்த்த ஏராளமான நித்யானந்தா பக்தைகள் விளக்கு ஏற்றி அதன் செல்பியையும் பதிவிட்டு வருகின்றனர்.