கிருஷ்ணகிரியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க-வினர் குண்டுகட்டாக கைது...

First Published Apr 2, 2018, 9:08 AM IST
Highlights
DMK members arrested in Krishnagiri


கிருஷ்ணகிரி 

சென்னையில் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக-வினர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து கிருஷ்ணகிரி மாவட்டத்தின் மூன்று இடங்களில் தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, சென்னையில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக-வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அவர்கள் அனைவரையும் காவலாளர்கள் கைது செய்தனர். 

இதற்கு கண்டனம் தெரிவித்தும், காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வலியுறுத்தியும் நேற்று கிருஷ்ணகிரியில் கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை எதிரில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் செங்குட்டுவன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். 

இந்த ஆர்ப்பாட்டத்தில், மாநில விவசாய அணி துணைச் செயலாளர் வெங்கடேசன், மாவட்டப் பொருளாளர் ராஜேந்திரன், நகரச் செயலாளர் நவாப், மகளிர் அணி அமைப்பர் பரிதா நவாப், இளைஞரணி துணை அமைப்பாளர் அமீன், முன்னாள் கவுன்சிலர் அஸ்லாம் மற்றும் கட்சியினர் பங்கேற்றனர்.

அதேபோன்று, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் ஓசூர் பேருந்து நிலையம் அருகிலும், காவேரிப்பட்டணத்தில், தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், திராவிடர் கழகம் சார்பிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இந்த ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட 34 பேரை காவலாளர்கள் கைது செய்து, தனியார் திருமண மண்டபத்துக்கு அழைத்து சென்றனர். பின்னர், கைதான அனைவரும் வழியிலேயே விடுதலை செய்யப்பட்டனர்.
 

click me!