அதிமுக கரைவேட்டியை தீபா பேரவையினர் கட்டுவதா? - விழாவில் தகராறு…

First Published Jan 9, 2017, 10:14 AM IST
Highlights


பரமக்குடி,

பரமக்குடியில் நடைப்பெற்ற தீபா பேரவை விழாவில், அதிமுக கரைவேட்டியை தீபா பேரவையினர் கட்டுவதா என்று சசிகலா ஆதரவாளர்கள் தகராறில் ஈடுபட்டனர்.

பரமக்குடி பெருமாள் கோவில் முன்பு தீபா பேரவைத் தொடக்க விழா நடைப்பெற்றது. இந்த விழாவின் ஒருங்கிணைப்பாளர்கள் பூமிநாதன், நாகராஜன் ஆகியோர் தலைமை வகித்தனர். வேலுச்சாமி அனைவரையும் வரவேற்றார்.

முதலில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். அதனைத் தொடர்ந்து அங்கிருந்த பொதுமக்களுக்கு தீபாவின் உருவப்படம் பொறித்த அடையாள அட்டை வழங்கப்பட்டது.

இந்த விழாவையொட்டி ஆய்வாளர் கிருஷ்ணகுமார் தலைமையிலான காவலாளர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது முதுகுளத்தூர் ஒன்றிய எம்.ஜி.ஆர். இளைஞரணி துணைச் செயலாளர் செந்தில்குமார், நயினார்கோவில் ஒன்றிய எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் சிவக்குமார், ஜெயலலிதா பேரவை செயலாளர் வடமலையான், மற்றும் சிவா ஆகியோர் தலைமையிலான சசிகலாவின் ஆதரவான அ.தி.மு.க.வினர் திடீரென அங்கு வந்து விழா நடைபெற்ற இடத்தில் கட்டப்பட்டு இருந்த பேனரை கிழித்து தகராறில் ஈடுபட்டனர்.

அங்கு காவலாளர்கள் இருந்தும் அவர்கள் தகராறில் ஈடுபட்டு, இரு தரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

அதனைத் தொடர்ந்து காவலாளர்கள் அங்கு கூடி நின்றவர்களை விரட்டியடித்து விழாவிற்காக ஏற்பாடு செய்திருந்த பந்தலையும் பிடுங்கி எறிந்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதி பரபரப்புடன் காணப்பட்டது.

இந்த தகவல் பரவியதும் பெருமாள் கோவில் பகுதியில் ஏராளமான அ.தி.மு.க. நிர்வாகிகள் திரண்டனர்.

அவர்கள் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலாவை அவதூறாக பேசியதற்கும், அ.தி.மு.க. கரைவேட்டியை தீபா பேரவையினர் எப்படி கட்டலாம் என்றும் கண்டனம் தெரிவித்து கூச்சலிட்டனர்.

click me!