குற்றாலம் சித்திர சபையில் 16 வகை மூலிகைகளால் அபிஷேகம்: திரளான பக்தர்கள் தரிசனம்

By SG BalanFirst Published Jan 5, 2023, 1:05 PM IST
Highlights

குற்றாலத்தில் பிரசித்தி பெற்ற சித்திர சபையில் நடராஜ மூர்த்திக்கு நடைபெற்ற 16 வகையான மூலிகை அபிஷேகத்தை திரளான பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் கண்டு களித்தனர்.

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ள குற்றாலத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த குற்றாலநாதர் ஆலயத்தில் ஆண்டுதோறும் சித்திரை விசு திருவிழா, ஐப்பசி விசு திருவிழா, மார்கழி திருவாதிரை திருவிழா ஆகியவை பத்து நாள்கள் விமரிசையாக நடைபெறும்.

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான மார்கழி மாத திருவாதிரை திருவிழா கடந்த 28ஆம் தேதி அதிகாலையில் தொடங்கியது. இதனை முன்னிட்டு குற்றாலநாதர் சன்னதியில் உள்ள கொடிமரத்தில் 16 வகை முலிகைகளால் அபிஷேகம் செய்யப்பட்டது. வேத மந்திரங்களும் பஞ்ச வாத்தியங்களும் முழங்க கொடியேற்றம் நிகழ்ந்தது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று நடராஜமூர்த்திக்கு 16 வகை மூலிகை பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. பச்சை நிறத்தில் பட்டு உடுத்தி நடராஜ மூர்த்தி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தார்கள்.

நாளை, வெள்ளிக்கிழமை, திரிகூட மண்டபத்தில் வைத்து நடராஜ மூர்த்தியின் ஆருத்ரா தரிசனமும் தாண்டவ தீபாராதனையும் நடைபெறுகிறது. இந்த விழாவுக்காக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், கட்டளைதாரர்கள் வேண்டிய ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.

இடம் மாற போகும் திருப்பதி கோவில்.. 70 லட்சம் வீட்டை கோவிலுக்கு எழுதிக்கொடுத்த தமிழ்நாட்டு பெண் !!

click me!