Vijay for PM : முற்றும் மோதல்... விஜய்யை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தும் தவெக-வுக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ கொடுத்த பதிலடி!

Ganesh A   | ANI
Published : Sep 02, 2026, 12:01 PM IST
Tamil Nadu Congress MLA Tharahai Cuthbert (Photo/ANI)

சுருக்கம்

2029-ல் ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர், தமிழக வெற்றிக் கழகத்தினர் இன்னும் ரசிகர் மன்ற மனநிலையில்தான் உள்ளனர் என காங்கிரஸ் எம்.எல்.ஏ தாரகை கத்பட் கூறியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் மற்றும் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்யை அடுத்த பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தும் அக்கட்சியின் முயற்சிக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ தாரகை கத்பட் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 2029-ல் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை பிரதமராக்க தங்கள் கட்சித் தலைவர்கள் உறுதியான முடிவு எடுத்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய கத்பட், தவெக-வினரின் இந்தக் கருத்துகள், அவர்கள் சினிமா துறையிலிருந்து வந்ததால் ஏற்பட்ட தாக்கம் என்றார். "அவங்க தவெக எம்.எல்.ஏ-க்கள், அவங்க எல்லோரும் இன்னும் ரசிகர் மன்ற மனநிலையில்தான் இருக்காங்க. சினிமா துறையிலிருந்து ரசிகர் மன்ற அடிப்படையில்தான் அரசியலுக்கு வந்திருக்காங்க. அதனால அவங்க அப்படித்தான் சொல்வாங்க. ஆனா அரசியல்ரீதியா, 2029-ல் எங்க ராகுல் ஜி தான் பிரதமராக வருவார்னு எங்க தலைவர்கள் உறுதியான முடிவு எடுத்திருக்காங்க," என்று கத்பட் குறிப்பிட்டார்.

தவெக vs காங்கிரஸ் மோதல்

விஜய்யை ஒரு தேசியத் தலைவராக தவெக தலைவர்கள் தொடர்ந்து முன்னிறுத்தி வரும் நிலையில், இரு கட்சிகளுக்கும் இடையே அரசியல் நிலைப்பாடு குறித்த கருத்து வேறுபாடுகள் அதிகரித்து வருவதை இந்தக் கருத்துகள் காட்டுகின்றன. முன்னதாக, தவெக-வின் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, "நாட்டின் மிக உயர்ந்த அரசியலமைப்புப் பதவியை தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர்தான் வகிக்க வேண்டும்" என்று கூறியிருந்தார். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ராகுல் காந்திக்கு அடுத்தபடியாக, 2029-ல் பிரதமர் பதவிக்கு விருப்பமான நபர்களில் ஒருவராக விஜய்யின் பெயரையும் ஒரு தனியார் ஊடகக் கருத்துக் கணிப்பு குறிப்பிட்டிருந்தது.

இந்த விவகாரம் பாஜக தரப்பிலிருந்தும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. "விஜய்யை பிரதமர் வேட்பாளராக தவெக தலைவர்கள் ஆதரிக்கும் நிலையில், காங்கிரஸ் கட்சி ஏன் இன்னும் தவெக தலைமையிலான அரசில் தொடர்கிறது?" என்று பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் சி.ஆர். கேசவன் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கிடையே, தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாரகை கத்பட்-ன் இருக்கை இந்த வாரம் விவாதப் பொருளானது. ஆகஸ்ட் 31 அன்று, தவெக எம்.எல்.ஏ-க்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த பகுதியிலிருந்து, எதிர்க்கட்சி வரிசையின் முன்பகுதிக்கு அவரது இருக்கை மாற்றப்பட்டது.

காங்கிரஸ் மற்றும் தவெக இடையே கருத்து வேறுபாடுகள் நிலவுவதாக சர்ச்சை எழுந்த நிலையில் இந்த இருக்கை மாற்றம் நிகழ்ந்துள்ளது. இதற்கு முன்பு கத்பட், தவெக சட்டமன்ற உறுப்பினர்களுடன் அமர்ந்திருந்தார். 2029 மக்களவைத் தேர்தலில் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக தவெக ஆதரிக்கவில்லை என்றால், காங்கிரஸ் அமைச்சர்கள் ராஜினாமா செய்வார்கள் என்று தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் எஸ். ராஜேஷ் குமார் கூறியதைத் தொடர்ந்து இந்த அரசியல் நகர்வுகள் நடந்துள்ளன.

கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவராக ஜார்ஜ் ராபின்சன் பதவியேற்ற விழாவில் பேசிய ராஜேஷ் குமார், 2029-ல் ராகுல் காந்தி பிரதமராவார் என்று உறுதியாகத் தெரிவித்திருந்தார். 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு திமுகவுடனான நீண்ட கால கூட்டணியை முறித்துக் கொண்ட காங்கிரஸ், " வகுப்புவாத சக்திகளை அரசாங்கத்தில் இருந்து விலக்கி வைக்க வேண்டும்" என்ற நிபந்தனையுடன், விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், சிபிஐ மற்றும் சிபிஐ(எம்) கட்சிகளுடன் சேர்ந்து தவெக தலைமையிலான அரசுக்கு ஆதரவளித்து வருகிறது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அனிதா நினைவேந்தலுக்கு தவெக அரசு அனுமதி தர மறுப்பது ஏன் ? சட்டப்பேரவையில் உதயநிதி கேள்வி
எதிர்க்கட்சிகளை வெளுத்து வாங்கிய ஆதவ் அர்ஜுனா!" - பேரவையில் அனல் பறந்த பேச்சு!