ஈரோட்டில் இரு பிரிவினரிடையே மோதல்; ஒருவருக்கு அரிவாள் வெட்டு மற்றொருவருக்கு கத்தி குத்து...

First Published May 12, 2018, 11:18 AM IST
Highlights
Confrontation between two sects in Erode Cut the scythe one to another


ஈரோடு

ஈரோட்டில் கோவில் திருவிழா நடத்துவதில் ஏற்பட்ட மோதலில் ஒருவருக்கு அரிவாள் வெட்டு மற்றொருவருக்கு கத்தி குத்து விழுந்தது. இது தொடர்பாக 7 பேரை காவலாளர்கள் கைது செய்தனர். தலைமறைவான ஒருவரை தேடி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம், டி.ஜி.புதூர் அருகே உள்ள பெரியகொடிவேரி ஒட்டர்பாளையத்தில் 20 ஆண்டுகள் பழமையான அலங்கார மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் திருவிழா நடைபெறும். 

ஒரே சமுதாயத்தை சேர்ந்த இரு பிரிவினருக்கு இடையே யார் திருவிழா நடத்துவது? என்று சில ஆண்டுகளாக பிரச்சனை உள்ளது. அதனால் ஆண்டுதோறும் அமைதி பேச்சுவாத்தை நடத்தி, ஊர் மக்கள் எந்த தரப்பினரை திருவிழா நடத்த சொல்கிறார்களோ அவர்கள் நடத்தி வந்தனர். 

அதன்படி, இந்த ஆண்டு திருவிழா நடத்துவதற்கு கடந்த மாதம் 30-ஆம் தேதி அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. கோபி ஆர்.டி.ஓ. தலைமையில் நடந்த இந்த பேச்சுவார்த்தையில் ஒரு தரப்பினர் நடத்திக்கொள்ள முடிவு செய்யப்பட்டது. 

அதனையேற்று கடந்த 1-ஆம் தேதி கோவிலில் கம்பம் நடப்பட்டது. நேற்று முன்தினம் கம்பம் பிடுங்கப்பட்டு திருவிழா நிறைவு பெற்றது. இந்த நிலையில் திருவிழா நடத்த அனுமதி மறுக்கப்பட்ட ஒரு தரப்பை சேர்ந்த 8 பேர், திருவிழா நடத்திய வேலுச்சாமி என்பவரின் வீட்டுக்கு நேற்று சென்று அவரை தாக்க முயன்றனர். 

அப்போது வேலுச்சாமியின் மகன் கோபு என்பவர் அதை தடுக்க முயன்றார். அவருக்கு நெற்றியில் அரிவாள் வெட்டு விழுந்தது. அதைப்பார்த்து அருகே இருந்த தீபன் சக்கரவர்த்தி என்பவர் தடுக்க முயன்றார். அவருக்கு கத்திக்குத்து விழுந்தது. இதில் அவருக்கு கையில் காயம் ஏற்பட்டது. 

அதனைத் தொடர்ந்து எட்டு பேரும் அங்கிருந்து ஓடிவிட்டார்கள். உடனே அக்கம்பக்கத்தினர் உதவியுடன் வேலுச்சாமி மகன் கோபுவையும், தீபன் சக்கரவர்த்தியையும் அவசர ஊர்தியில் சத்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு இருவருக்கும் மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். கோபு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இதுபற்றிய புகாரின் பேரில் பங்களாப்புதூர் காவலாளர்கள் விசாரணை நடத்தி கோபுவை அரிவாளால் வெட்டி, தீபன் சக்கரவர்த்தியை கத்தியால் கிழித்ததாக அதே பகுதியை சேர்ந்த சமுத்திரம் (54), மாணிக்கம் (51), சுந்தரம் (55), வெள்ளியங்கிரி (25), நாகராஜ் (48), மோகன்ராஜ் (24), ஜெகதீஸ்வரன் (27) ஆகிய 7 பேரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள முருகேசன் (40) என்பவரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

கைது செய்யப்பட்ட 7 பேரும் கோபி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு கோபி கிளை சிறையில் அடைக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து ஊருக்குள்  பலத்த காவல் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

click me!