அண்ணாசாலை போன்று வண்ணாரபேட்டையிலும் மெட்ரோ விரிசல் - சிமெண்ட் கலவை வெளியேறியதால் பரபரப்பு

First Published Apr 14, 2017, 3:30 PM IST
Highlights
cement mixture leakage in vannarappettai due to metro works


மெட்ரோ ரயில் பணியால் சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள குடியிருப்புகள் குலுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை மாநகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் விதமாக  19 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் 45 கிலோ மீட்டர் நீளத்துக்கு மெட்ரோ ரயில் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

வண்ணாரப்பேட்டையில் இருந்து அண்ணாசாலை, கிண்டி வழியாக மீனம்பாக்கம் ரயில் நிலையம் வரையும், சென்னை கடற்கரையில் இருந்து அண்ணாநகர், கோயம்பேடு வழியாக பல்லாவரம் வரையிலும் இரண்டு பாதைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. 

இதில் முதல்  கட்டமாக கோயம்பேடு முதல் கிண்டி வரையிலான 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரயில் பாதை அமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டது. இதே வழித்தடத்தடத்தில் வண்ணாரப்பேட்டையில் இருந்து மீனம்பாக்கம் விமான நிலையம் வரையிலான 35 கிலோ மீட்டர் தூரம் ரயில் பாதை அமைக்கும் பணி இரவு பகலாக நடைபெற்று வருகிறது. 

வண்ணாரப்பேட்டை, மற்றும் அண்ணா சாலை முழுவதும் பாதாள ரயில் பாதை அமைக்கும் பணி இரவு பகலாக தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ராட்சத இயந்திரங்களைக் கொண்டு பூமிக்கடியில் சுரங்கம் அமைக்கப்படுவதால் அவ்வப்போது லேசான நில அதிர்ச்சி, வீடுகளில் விரிசல், சாலையில் சிறிய பள்ளம் ஆகியவை ஏற்படுவது வாடிக்கையாகி உள்ளது. 

கடந்த வாரத்தில் கூட மெட்ரோ ரயில் பணியால் அண்ணாசாலையில் ஏற்பட்ட பிரம்மாண்ட பள்ளத்தால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. ஒரு அரசுப் பேருந்தும், காரும் பள்ளத்திற்குள் கவிழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் வண்ணாரப்பேட்டையில் உள்ள லாலாகுண்டா,முத்தையா மேஸ்திரி நகர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருக்கும் வீடுகள் இன்று பிற்பகலில் திடீரென குலுங்கத் தொடங்கின. இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அலறடி அடித்துக் கொண்டு வெளியேறி பொதுவெளியில் தஞ்சம் அடைந்தனர். சாலையில் ஓட்டை ஏற்பட்டு அதில் இருந்து சிமெண்ட் கலவை ஆறாக ஓடியதாலும் பரபரப்பு ஏற்பட்டது. 

click me!