வகுப்பறையில் பிறந்த நாள் கொண்டாட்டம்.. ஆசிரியருக்கு கேக் ஊட்டிய தலைமை ஆசிரியை.. அதிரடி சஸ்பெண்ட்..

By Thanalakshmi VFirst Published Jun 19, 2022, 4:50 PM IST
Highlights

பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி வகுப்பறையில் கேக் வெட்டிய கொண்டாடிய அரசுப்பள்ளி ஆசிரியரும் அவருக்கு கேக் ஊட்டிவிட்ட பெண் தலைமை ஆசியையும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள பங்களாபுதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆங்கில பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி வரும் மணிகண்டன் என்பவருக்கு கடந்த 16ம் தேதி பிறந்த நாள் வந்துள்ளது. இதனையொட்டி அன்றைய தினம் பள்ளி வகுப்பறையில் வைத்து அவருக்கு கேக் வெட்டி பிறந்த நாள் விழாவை கொண்டாடியுள்ளனர். இதில் பள்ளியின் தலைமை ஆசிரியர் சித்ராதேவி, சக ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்துக்கொண்டுள்ளனர்.

இந்நிகழ்வின்போது 1 கிலோ கேக் வெட்டப்பட்ட நிலையில் மாணவ மாணவிகளுக்கு கேக் கொடுக்கப்படவில்லை என்று சொல்லப்படுகிறது. அதோடுமட்டுமில்லாமல், ஆசிரியர் மணிகண்டனுக்கு தலைமை ஆசிரியை சித்ராதேவி கேக் ஊட்டி விட்டுள்ளார். இது தொடர்பான  புகைப்படங்களை மணிகண்டன் அவரது வாட்ஸ்அப் ஸ்டேட்ஸில் வைத்துள்ளார். இப்புகைப்படங்கள் அனைத்து ஆசிரியர் குழுக்களிலும் பகிரப்பட்டுள்ளது. 

இதனிடையே ஆசிரியர் மணிகண்டன், தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயலாளராகவும் உள்ளார். இந்நிலையில் குளித்தலை மாவட்ட கல்வி அலுவலர் பாலசுப்பிரமணியன், தலைமை ஆசிரியை சித்ராதேவி, ஆசிரியர் மணிகண்டன் ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். 

இதுக்குறித்து முதன்மை கல்வி அலுவலர், பள்ளி வகுப்பறையில் மாணவர்கள் முன்பு கேக் வெட்டியுள்ளனர். அதனை இருவரும் ஊட்டிவிட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இதனால் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்நிலையில் இது தொடர்பாக சம்பந்த ஆசிரியர் மணிகண்டன் தெரிவிக்கையில்,” பிறந்த நாளையொட்டி பள்ளி குழந்தைகளுக்கு உணவு வழங்கியதாகவும் மாணவ, மாணவிகளின் வேண்டுகோளுக்காக கேக் வெட்டியதாகவும் கூறினார். இப்புகைப்படங்களை தனது வாட்ஸ்அப் ஸ்டேட்ஸில் வைத்த நிலையில் சிலர் அதனை சர்ச்சையாக்கி வருவதாக தெரிவித்தார்.

மேலும் படிக்க: விருப்பத்தின் படி பாலியல் தொழில் .. கைது நடவடிக்கையை தவிருங்கள்.. போலீசுக்கு நீதிமன்றம் அறிவுரை

click me!