
வடகாடு
ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை முழுமையாக கைவிட வேண்டும் என்று நெடுவாசலில் எட்டு நாள்களாக போராடி வரும் மக்களுக்கு, மத்திய அரசு செவி சாய்க்காததால் உண்ணாவிரதத்தில் ஈடுபட போகிறோம் என்று நெடுவாசல் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு அருகே உள்ள நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் என்னும் இயற்கை எரிவாயு எடுக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இதனையடுத்து, நெடுவாசல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால் இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் கடுமையாக பாதிக்கப்படும்.
மேலும், இங்குள்ள மக்களின் வாழ்வாதாரமான விவசாயம் அழிந்துவிடும். விவசாயம் அழிந்தால் இந்தப் பகுதி மக்களுக்கு மட்டுமல்ல, தமிழகம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாநிலங்களும் தான் பாதிக்கப்படும்.
ஏனெனில், இந்த மாவட்டத்தில் இருந்துதான் அண்டை மாநிலங்களுக்கு அரிசி, பழ வகைகள் மற்றும் இன்னும் பிற உணவுப் பொருட்கள் அனுப்பப்படுகிறது.
எனவே, இந்தத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி அப்பகுதி விவசாயிகள் மற்றும் கிராம மக்கள்ம், திட்டம் அறிவிக்கப்பட்ட முதல் நாளிலிருந்து பல்வேறு போராட்டங்களை நடத்துகின்றனர்.
மேலும், இந்தப் பகுதியில் ஆய்வு செய்ய சென்ற வருவாய்த்துறை, ஓ.என்.ஜி.சி. அதிகாரிகளை பெரும் படையாய் சூழ்ந்து முற்றுகையிட்டனர்.
இதனைத் தொடர்ந்து நெடுவாசல் கிராமத்திற்குச் செல்லும் சாலையின் இருபுறமும் மற்றும் கடைகளிலும் கருப்பு கொடி கட்டி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், நெடுவாசல் கிராமத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தால் ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டுள்ள இடத்தின் அருகே பந்தல் அமைத்து, நேற்று பெண்கள், சிறுவர்கள் உள்பட ஏராளமானோர் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்தை ரத்து செய்தே தீர வேண்டும் என்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், கடந்த எட்டு நாள்களாக இரவு, பகல் பாராமல் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி போராடி வரும் மக்கள், தங்களின் கோரிக்கைகளுக்கு மத்திய, மாநில அரசுகள் இதுவரை செவி சாய்க்காதது வேதனை அளிக்கிறது என்று தெரிவித்துள்ளனர்.
இதற்காக தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் கூறுகின்றனர்.
புதுக்கோட்டை உதவி ஆட்சியர் அம்ரித், நெடுவாசலில் எரிவாயு சோதனை மேற்கொள்ளப்பட்ட இடத்தை ஆய்வு செய்தார்.
அப்போது, அத்திட்டம் தொடர்பாக விவசாயிகள் மற்றும் வருவாய்த் துறையினரிடம் விளக்கங்களை கேட்டு சென்றார்.
நெடுவாசலுக்கு அரசு அலுவலர்களை அனுமதிக்க மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்ததால், நேற்று வருவாய்த்துறையினர் ஆய்வுக்கு வந்தபோது வடகாடு காவல் ஆய்வாளர் கரிகாலசோழன் தலைமையிலான காவலாளர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது கறம்பக்குடி வட்டாட்சியர் யோகேஸ்வரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.