நாட்டு நாய் மையத்தை மூடும் உயர்நீதிமன்ற உத்தரவு - உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது தமிழக அரசு

Asianet News Tamil  
Published : Jan 30, 2017, 03:34 PM ISTUpdated : Sep 19, 2018, 03:02 AM IST
நாட்டு நாய் மையத்தை மூடும் உயர்நீதிமன்ற உத்தரவு -  உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது தமிழக அரசு

சுருக்கம்

தமிழகத்தில் இருக்கும் ஒரே ஒரு நாட்டு நாய்கள் கருதரிப்பு மையத்தை மூடும் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. 

விலங்குகள் நல வாரியத்தின் விதிமுறைகள் சரியாக பின்பற்றப்படுவதில்லை என கூறி பீட்டா அமைப்பு தொடர்ந்த வழக்கில் நாய்கள் கருதரிப்பு மையத்தை  மூட கடந்த   ஆண்டு டிச .7 அன்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கிஷ்ன் கவுல் அமர்வு உத்தரவு பிறப்பித்திருந்தது.

தமிழகத்தின் பூர்வீக நாய் இனங்களான சிப்பிப்பாறை, கன்னி, கோம்பை, ராஜபாளையம் போன்ற நாய்களின் இனத்தை பாதுகாக்கவும், அந்த நாய்களின் இனத்தை பெருக்கவும் சென்னை சைதாப்பேட்டையில் நாய்கள் இன விருத்தி மையத்தை 1980-ம் ஆண்டு தமிழ்நாடு கால்நடைத்துறை தொடங்கியது.

இந்த நாய்கள் இன விருத்தி மையத்தை கடந்த 2013-ம் ஆண்டு இந்திய விலங்குகள் நல வாரியத்தின் அதிகாரிகள் ஆய்வுகள் செய்தனர். அப்போது, இந்த மையம் இந்திய விலங்குகள் நல வாரியத்தில் பதிவு செய்யவில்லை, விதிமுறைகளை பின்பற்றி நாய்களை பராமரிக்கவில்லை என்பது உட்பட பல்வேறு விதிமீறல்கள் இருப்பதாக தெரிவித்து  மையத்தை  மூட அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

இதைத்தொடர்ந்து சென்னை ஐகோர்ட்டில் பீட்டா என்ற விலங்குகள் நல தொண்டு நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. அதில், ‘சைதாப்பேட்டையில் உள்ள நாய்கள் இன விருத்தி மையத்தை இழுத்து மூட தமிழ்நாடு கால்நடைத்துறை செயலாளருக்கு உத்தரவிட வேண்டும். 

அந்த மையத்தில் உள்ள நாய்களுக்கு சிகிச்சை வழங்கும் விதமாக, அவற்றை எங்கள் அமைப்பிடம் ஒப்படைக்க வேண்டும்’ என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த மனுக்கள் ஐகோர்ட்டில் கடந்த 2014-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் விசாரிக்கப்பட்ட போது, அரசு தரப்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர் , நாய்கள் இன விருத்தி மையத்தை தொடர்ந்து நடத்துவதற்கு அரசு விரும்புகிறது. 

இதற்காக, இந்திய விலங்கு நல வாரியத்திடம் பதிவு செய்யவும், அந்த அமைப்பு சுட்டிக்காட்டிய குறைகளை நிவர்த்தி செய்யவும் தயாராக உள்ளது. இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள 3 மாதம் கால அவகாசம் வேண்டும்’ என்று கூறினார்.

இதை ஏற்றுக் கொண்ட ஐகோர்ட்டு, 3 மாதம் கால அவகாசம் வழங்கியது. மேலும், நாய்கள் இனவிருத்தி மையத்தை இந்திய விலங்கு நல வாரிய அதிகாரிகள் மீண்டும் ஆய்வு செய்ய வேண்டும். 

அப்போது விதி மீறல் இருந்தால், அந்த மையத்தை இழுத்து மூடவேண்டும். ஒருவேளை அனைத்து விதி முறைகளும் பூர்த்தி செய்யப்பட்டால், அந்த மையம் தொடர்ந்து செயல்படலாம் என்றும் உத்தரவிட்டது.

இந்த நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோர் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்திய விலங்குகள் நல வாரியம் சார்பில் ஆய்வு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டன.

 அதில், நாய்கள் இனவிருத்தி மையத்தில் விதிமுறைகள் பூர்த்தி செய்யப்படவில்லை. தொடர்ந்து பழைய நிலையே நீடிக்கிறது’ என்று கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘நாய்கள் இனவிருத்தி மையத்தில்  எந்த முன்னேற்றமும் இல்லை என்றும் நாய்கள் சரியாக பராமரிக்கப்படவில்லை என்றும் இந்திய விலங்குகள் நல வாரிய அதிகாரிகள் அறிக்கையில் கூறியுள்ளனர். 

எனவே, 2 மாதத்துக்குள் சைதாப்பேட்டையில் உள்ள நாய்கள் இன விருத்தி மையத்தை அரசு மூட வேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.

இதையடுத்து நாட்டு நாய்கள் இனம் அழியும் வாய்ப்புள்ளது என விலங்குகள் ஆர்வலர்கள் தெரிவித்தனர். ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டத்தில் நாட்டு நாய்கள் பிரச்சனையும் எதிரொலித்தது.

இந்நிலை நாட்டுநாய்கள் இனத்தை பாதுகாக்கும் வகையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு செய்துள்ளது. தமிழக அரசு சார்பில் வழக்கறிஞர் யோகேஷ் கண்ணா தாக்கல் செய்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

PREV
click me!

Recommended Stories

ஜூன் 25 கடைசி நாள்! 10 கிராம் தங்கம் மற்றும் ரூ.50,000 ரொக்கப்பரிசு! தமிழக அரசின் சூப்பர் அறிவிப்பு! விண்ணப்பிப்பது எப்படி?
Magalir urimai thogai: ஜூன் மாத மகளிர் உரிமைத் தொகை.! உங்களுக்கு கிடைக்குமா? உடனே செக் பண்ணுங்க!