
சென்னை மீனம்பாக்கம் அருகே ஏடிஎம் இயந்திரத்தில் நிரப்புவதற்காக பணம் எடுத்துச் சென்றபோது, அதிலிருந்த 28 லட்சம் ரூபாய் பணத்தை வண்டியின் ஓட்டுநரே திருடிச் சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருக்கும் கனரா வங்கியின் ஏ.டி.எம் இயந்திரத்தில் பணத்தை நிரப்புவதற்காக அவ்வங்கியின் ஊழியர்கள் கருணாகரன் மற்றும் ராஜ்குமார் சென்றுள்ளனர்.
பணம் கொண்டு சென்ற வேனின் டிரைவர் உதயகுமார், உடன் இருந்த காவலரை, அதிகாரிகள் அழைப்பதாக பொய் சொல்லி அனுப்பியுள்ளார். காவலர் விமான நிலையத்தில் இருக்கும் ஏ.டி.எம்முக்குச் சென்றதும், வண்டியில் இருந்த ரூபாய் 28 லட்சத்தை உதயகுமார் திருடிச் சென்றார்.
பணத்தை ஏ.டி.எம்மில் நிரப்பிவிட்டு திருப்பி வந்த அதிகாரிகள் மற்றும் காவலர் வாகனம் இல்லாததும் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இதுகுறித்து, சென்னை விமான நிலைய போலீஸில் புகார் அளித்தனர்.
இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, பணம் நிரப்பும் நிறுவனத்துக்குச் சொந்தமான அந்த வாகனத்தை சென்னை மீனம்பாக்கம் அருகில் இருக்கும் கல்லூரி அருகில் விட்டு விட்டு டிரைவர் உதயகுமார் தப்பிச் சென்றார்.