புதுக்கோட்டை
நிலுவலையில் உள்ள அனைத்து நலவாரியப் பணப் பலன்களை விரைந்து வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி மார்ச் 28-ஆம் பெருந்திரள் முறையீடு போராட்டம் நடத்தப்போவதாக தையல் கலைஞர்கள் சம்மேளனம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் தையல் கலைஞர்கள் சம்மேளனத்தின் மாநிலக் குழுக் கூட்டம் நேற்று நடைப்பெற்றது.
இந்தக் கூட்டத்துக்கு தையல் கலைஞர்கள் சம்மேளனத்தின் தலைவர் கே. செல்லப்பன் தலைமை தாங்கினார்.
இந்தக் கூட்டத்தில், "கடந்த மூன்று கல்வி ஆண்டுகளாக நலவாரியப் பணப்பலன்கள் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது.
ஓய்வூதியம் கடந்த ஓராண்டாக வழங்கவில்லை.
மகப்பேறு, திருமணம், இயற்கை மற்றும் விபத்து மரணம் உள்ளிட்ட அனைத்துப் பணப்பயன்களும் ஆண்டுக்கணக்கில் நிலுவையில் உள்ளன.
மேற்கண்ட நிலுவைகளை தாமதமின்றி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி சென்னை அமைப்புசாரா தொழிலாளர் நலவாரிய அலுவலகம் முன் வரும் மார்ச் 28-ஆம் தேதி பெருந்திரள் முறையீடு, முற்றுகைப் போராட்டம் நடத்துவது" என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் பொதுச் செயலர் ஆர். வேலுச்சாமி, பொருளாளர் எம். ஐடாஹெலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.