சிக்கிம் மாநில தூதரானார் ‘இசைப்புயல்’ ஏ.ஆர். ரஹ்மான்

First Published Jan 8, 2018, 10:20 PM IST
Highlights
a.r.rahman appointed as an ambaseder of sikkim

நாட்டின் வடகிழக்கில் உள்ள சிக்கிம் மாநிலத்தின் தூதராக தமிழகத்தின் இசை அமைப்பாளரும், இசைப்புயல் என அழைக்கப்படும் ஏ.ஆர். ரஹ்மான் நியமிக்கப்பட்டுள்ளார்.

சிக்கிம் மாநிலத்தின் கேங்டாக் நகரில்  11 நாள் சிக்கிம் ரெட் பாண்டா குளிர்கால விழா நேற்று தொடங்கியது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானைமாநிலத்தின் தூதராக முதல்வர் பவான் குமார் அறிவித்தார். இந்த அறிவிப்பு வெளியானதும் ரசிகர்கள் பெருத்த கரகோஷம் எழுப்பி தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர். 

இது குறித்து ஏ.ஆர். ரஹ்மான் கூறுகையில், “ சிக்கிம் மாநிலம் என்பது நம்பகத்தன்மை, அழகு, தனித்தன்மை ஆகியவற்றுக்கு உகந்த இடம். இசைதொடர்பாக பலவிஷயங்கள் ஆலோசிக்க அடிக்கடி இங்கு வருவேன். சிக்கிம் மாநிலத்தை சிறந்த சுற்றுலாத் தளமாக மாற்ற ஏராளமான இசை நிகழ்ச்சிகள் செய்ய முடியும். இந்த மாநிலத்தின் தூதராக என்னை நியமித்தமைக்கு சிக்கிம் மாநில மக்களுக்கு நன்றியை தெரிவிக்கிறேன். மிகவும் பெருமையாகவும், சிறப்பாகவும் இந்த பதவியை கருதுகிறேன். இனி அனைவரும் ஒன்றாக பயணிப்போம்’’ எனத் தெரிவித்தார்.

சிக்கிம் மாநிலத்தின் தூதராக ஏ.ஆர். ரஹ்மான் நியமிக்கப்பட்டதன் மூலம்  மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியமாக இருக்கும் சுற்றுலா சிறப்பாக வளர்ச்சி பெறும்,ரஹ்மானின் சர்வதேச புகழ் பல நாட்டவர்களை இங்கு ஈர்க்கும் என்று அந்த மாநில மக்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள டார்ஜிலிங் மலைப்பகுதியில் கூர்காலாந்து மக்கள் போராட்டம் நடத்தியதால், சிக்கிம் மாநிலத்தில் சுற்றுலா பயணிகள் வருகை கடந்த ஆண்டு 12 லட்சமாக உயர்ந்தது. கடந்த 2016ம் ஆண்டு 7.5 லட்சமாக மட்டுமே இருந்தது.

இதற்கிடையே குளிர்காலத்தை கொண்டாடும் வகையில் நேற்று 11 நாள் திருவிழா தொடங்கியுள்ளது. இந்த நாட்களில் இசை நிகழ்ச்சி, நடனம், வீர விளையாட்டு, கண்காட்சிகள், இயற்கை உணவுப் பொருட்கள் கண்காட்சி ஆகியவை நடத்தப்பட உள்ளது.

click me!