அனைத்து காளைக்கும் தங்கக்காசு..எதிர்பார்ப்பை கிளப்பும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு..முக்கிய வி.ஐ.பி காளை தயார்.

By Thanalakshmi VFirst Published Jan 15, 2022, 10:12 PM IST
Highlights

உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நாளை மறுநாள் நடைபெற உள்ளது. இதில் வாடிவாசலில் அவிழ்த்துவிடப்படும் அனைத்துக் காளைகளுக்கும் தங்கக்காசுகள் பரிசாக வழங்கப்படவுள்ளது.

பொங்கல் பண்டிகைக்கு ஆவலுடன் அனைவரும் எதிர்பார்க்கும் உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு 17ம் தேதி நடக்கிறது. நாளை ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் ஒரு நாள் தள்ளி திங்கள்கிழமை இந்தப் போட்டி நடக்கிறது. சிறந்த காளை, வீரருக்கு கார்கள் பரிசும், வாடிவாசலில் அவிழ்க்கப்படும், பங்கேற்கும் அனைத்துக் காளைக்கும் தங்கக் காசுகள் வழங்கப்படுவதால் இந்த போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொங்கல் பண்டிகை நாட்களில் மதுரை மாவட்டத்தில் நடக்கும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் மிகவும் பிரசித்திப்பெற்றவை. 14ம் தேதி அவனியாபுரத்திலும், 15ம் தேதி பாலமேட்டிலும், 16ம் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடக்கும். இதில், அலங்காநல்லூர் போட்டியில் தமிழகம் முழுவதும் இருந்து சிறந்த காளைகள், சிறந்த மாடுபிடி வீரர்கள் பங்கேற்பதால் மற்றப் போட்டிகளை இந்தப் போட்டி விறுப்பாகவும், சுவாரசியமாகவும் இருக்கும். அதனாலேயே, வெளிநாடுகளில் இருந்தும் இந்தப் போட்டியைக் காண ஆண்டுதோறும் சுற்றுலாப்பயணிகள் திரள்வார்கள். அவர்களுக்காக நிரந்தரமாக அமைக்கப்பட்ட அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு திடலில் உலக சுற்றுலாப்பயணிகள் கேலரி உள்ளது.

இந்த ஆண்டு கொரோனா தொற்றால் ஒரு காளை, ஒரு வீரர் ஒரு ஜல்லிக்கட்டுப் போட்டியில் மட்டுமே பங்கேற்க முடியும் என்ற முடிவால் சிறந்த காளை, வீரர்கள் அலங்காநல்லூர் போட்டியை குறி வைத்து அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டில் விளையாடாமல் உள்ளனர். அவர்கள் நாளை நடக்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளைகளை அவிழ்ப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தின் முக்கிய இன்னாள், முன்னாள் அமைச்சர்கள், ஜல்லிக்கட்டு அமைப்பு நிர்வாகிகள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் வளர்க்கும் முக்கிய காளைகள் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் களம் இறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த போட்டியில் வழக்கம்போல் சிறந்த காளைக்கும், சிறந்த வீரருக்கும் கார்கள் பரிசாக வழங்கப்படுகின்றன. மேலும் அலங்காநல்லூர் வாடிவாசலில் அவிழ்த்துவிடப்படும் அனைத்துக் காளைகளுக்கும் தன்னுடைய ஏற்பாட்டில் தங்கக் காசு பரிசாக வழங்கப்படும் என்று அமைச்சர் பி.மூர்த்தி அறிவித்துள்ளார். அதனால், போட்டியில் பங்கேற்கும் அனைத்து காளைகளுக்கும் தங்ககாசு கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் காளை வளர்ப்போர் உற்சாகமடைந்துள்ளனர்.மேலும், தமிழகத்தின் முக்கிய விஐபி காளைகள், இந்த ஜல்லிக்கட்டில் பங்கேற்க உள்ளதால் அந்த களைகளை அடக்கும் வீரர்களுக்கு 'திடீர்' அறிவிப்பு பரிசுகளும், ரொக்கப்பரிசும் வழங்கப்படும் என்பதால் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒவ்வோர் ஆண்டும் முதலமைச்சர் வந்து அலங்காநல்லூர் போட்டியை தொடங்கி வைப்பார்கள். அந்த வகையில் கடந்த ஆண்டு முன்னாள் முதல்வர் கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் தொடங்கி வைத்தனர். அதனால், இந்த ஆண்டு முதல்வர் ஸ்டாலின் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு வருவதாக அமைச்சர் பி.மூர்த்தி ஆரம்பத்தில் கூறியிருந்தார். ஆனால், தற்போது கரோனா தொற்று பரவுவதால் முதல்வர் வந்தால் இன்னும் கூட்டம் அதிகமாகும் என்பதால் அவர் வரவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

click me!