
விழுப்புரம்
அ.தி.மு.க. பெண் கவுன்சிலரை கத்தியால் குத்தி 42 சவரன் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற இளைஞரைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
விழுப்புரம் கீழ்ப்பெரும்பாக்கத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளராக உள்ளார். இவருடைய மனைவி சுமதி (35) விழுப்புரம் நகரசபை 39–வது வார்டு கவுன்சிலராக உள்ளார். வெள்ளிக்கிழமை மதியம் சுமதி வீட்டில் பின்பக்க கதவை திறந்து வைத்தபடி தூங்கிக் கொண்டு இருந்தார்.
அப்போது உள்ளே புகுந்த மர்ம நபர் சுமதியை எழுப்பி அவரது கழுத்தில் கத்தியை வைத்து பீரோவை திறந்து நகைகளை எடுத்து கொடுக்கும்படி மிரட்டினார். அவர் மறுத்ததால் அந்த வாலிபர் சுமதியின் கழுத்திலும், முதுகிலும் சரமாரியாக கத்தியால் குத்தினார். இதில் படுகாயம் அடைந்த சுமதி அங்கேயே மயக்கம் போட்டு விழுந்தார்.
உடனே அந்த இளைஞர் பீரோவில் இருந்த 42 பவுன் நகைகளை கொள்ளையடித்துவிட்டு தப்பிச்சென்றார். அதன் மதிப்பு ரூ.9 இலட்சம். சுமதி சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்து, இரத்த காயத்தோடு வெளியே வந்து சத்தம் போட்டார். அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து இரத்தக்காயத்துடன் இருந்த சுமதியை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
தகவல் அறிந்த விழுப்புரம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். மோப்ப நாய் கொள்ளை நடந்த வீட்டில் இருந்து காகுப்பம் வரை ஓடிச்சென்று நின்றது.
கொள்ளை நடந்த வீட்டின் அருகில் உள்ள அரசு கலைக்கல்லூரியின் நுழைவுவாயிலில் இருந்த கண்காணிப்பு கேமராவை காவல்துறையினர் ஆய்வு செய்தனர். அப்போது 35 வயது மதிக்கத்தக்க ஒருவர் சம்பவம் நடந்த 10–வது நிமிடத்தில் மோட்டார் சைக்கிளில் கடந்து சென்றது பதிவாகியுள்ளது. ஆனால், அவரது முகம் தெளிவாக இல்லாததால் அவர் யார்? என்று காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் நகைக்காக நடந்ததா? அல்லது உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட மீண்டும் சுமதிக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டதால் இந்த செயலில் ஈடுபட்டனரா? என காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.