பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, மத்திய அரசின் கனவுத் திட்டங்களில் ஒன்று தான் ஸ்மார்ட் சிட்டி திட்டம். இந்த திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்படும் நகரங்கள், வளர்ந்த நாடுகளில் உள்ள, அனைத்து வசதிகளும் உடைய, ஹைடெக் நகரங்களை போல் மாற்றப்படும் என்றும் இதற்காக, மத்திய அரசு பல லட்சம் கோடி ரூபாய் செலவிட திட்டமிட்டுள்ளது.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் படி, உலகத் தரம் வாய்ந்த தொழில் நுட்பத்துடன், அனைத்து கட்டமைப்பு வசதிகள் அமைந்த நகரம் உருவாக்கப்படும்.
இந்த நகர மக்களின் வாழ்க்கைத் தரம், சர்வதேச நகரங்களுடன் ஒப்பிடும் வகையில் இருக்கும். சுத்தமான குடிநீர், தடையற்ற மின்சாரம், பளபளக்கும் சாலைகள், மின்னல் வேக இணைய வசதி, தானியங்கி கழிவு அகற்றல் நடைமுறை, சிறப்பான பொது போக்குவரத்து, 'டிஜிட்டல்' மயமான, பொது சேவைகள், குறைந்த விலையில் வீடு ஆகியவை, ஸ்மார்ட் சிட்டியின் கட்டமைப்பு அம்சங்கள் எனமத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், 100 நகரங்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளன. இதுவரை, 60 நகரங்கள் தேர்வாகி உள்ளன. தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, ஆகிய நகரங்கள் ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன..
இந்நிலையில் அடுத்த கட்டமான , 30 நகரங்களுக்கான பட்டியல் ஜூன் மாதம் இறுதியில் வெளியிடப்படும் என மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு அறிவித்திருந்தார்.
அதன்படி இன்று ஸ்மார்ட் சிட்டியின் அடுத்த பட்டியலை மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு இன்று அறிவித்தார். இந்த பட்டியலில் தமிழகத்தின் திருப்பூர், திருநெல்வேலி, தூத்துக்குடி திருச்சிராப்பள்ளி ஆகிய 4 நகரங்கள் இடம் பெற்றுள்ளன. இதே போன்று இந்தப் பட்டியலில் புதுச்சேரியும் இடம் பெற்றுள்ளது.