
காஞ்சிபுரம்
மத்திய அரசின் ஜிஎஸ்டி வரியில் மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் அனைத்து வகை பொருள்களுக்கும் 18 சதவீத வரி விதிக்கப்படுவதால் அதனை எதிர்த்து அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கத்தினர் செங்கல்பட்டில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு தலைமை அஞ்சல் நிலையம் எதிரே அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் என்.அன்பு தலைமை தாங்கினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், “மத்திய அரசு அறிவித்துள்ள ஜிஎஸ்டி வரியில் மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் அனைத்து வகை பொருள்களுக்கும் 18 சதவீத வரி விதிக்கப்படுவதற்கு கண்டனம் தெரிவிப்பது,
மாவட்ட மாற்றுத் திறனாளிகள் அலுவலகத்தில் பல்வேறு காரணங்களைக் காட்டி மாற்றுத் திறனாளிகள் அலைக்கழிப்படுவதைத் தடுக்க வலியுறுத்துவது,
செங்கல்பட்டில் செயல்படும் மாற்றுத் திறனாளிகள் அலுவலகம் அருகே இருபுறமும் பேருந்து நிறுத்தம் அமைக்க வேண்டும்,
அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்திட வேண்டும்,
ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவிகளை பெறும் வகையில் பன்னோக்கு அடையாள அட்டை வழங்கிட வேண்டும்,
அனைத்து வருவாய் கோட்டங்களிலும் கோட்டாட்சியர் தலைமையில் மாதாந்திர குறைதீர் கூட்டங்களை நடத்திட வேண்டும்,
உபகரணங்கள் கேட்டு விண்ணப்பித்த அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கும் உடனடியாக அவற்றை வழங்கிட வேண்டும்,
அனைத்துவகை மாற்றுத் திறனாளிகளுக்கும் மாத உதவித் தொகை ரூபாய் ஐந்தாயிரம் வழங்கிட வேண்டும்” என்பன உள்ளிட்ட பல்வேறு கேரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கத்தின் மாவட்டச் செயலாளர் வி.அரிகிருஷ்ணன், மாவட்டப் பொருளாளர் ஏ.கமலக்கண்ணன், மாவட்டத் துணைத் தலைவர்ஆர்.தாமோதரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.