தடுமாறும் தலைநகரம்... தமிழகத்தில் ஒரே நாளில் 8 ஆயிரத்தை எட்டித் தொட துடிக்கும் கொடூர கொரோனா...!

By Kanimozhi PannerselvamFirst Published Apr 14, 2021, 6:52 PM IST
Highlights

கடந்த 24 மணிநேரத்தில் 7,819 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,54,948 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் தொற்று பாதிப்பு 8000ஐ நெருங்கி உள்ளதால் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- கடந்த 24 மணிநேரத்தில் 7,819 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,54,948 ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலை 27ல் அதிகபட்சமாக 6,993 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்ட நிலையில், இரண்டாம் அலையில் மிக விரைவிலேயே 8 ஆயிரத்தை எட்டித் தொட உள்ளது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 7,785 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், 34 பேர் வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள் என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சென்னையில் கொரோனா தொற்றால் 2, 564 பேர் பாதிக்கப்பட்டதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,72,118 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 97,668 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன. 

இன்று கொரோனா உறுதியானவர்களில்,4,733 பேர் ஆண்கள், 3,086 பேர் பெண்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனா பாதித்த, ஆண்களின் மொத்த எண்ணிக்கை 5,76,450 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 3,78,642 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 36 ஆகவும் உள்ளது.  இன்று மட்டும் 3,464 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 8,87,663 ஆக உள்ளது. இன்று மட்டும் கொரோனா பாதித்த 25 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை  12,970 ஆக அதிகரித்துள்ளது. 

click me!