
Tamil Nadu Government Loan Scheme: தமிழ்நாடு அரசு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் சிறுபான்மையினர்களுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் தனிநபர் கடன், சுய உதவி குழுக்களுக்கான சிறு தொழில் கடன் மற்றும் கல்விக்கடன் ஆகிய கடன் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில், தமிழ்நாடு அரசு சொந்த தொழில் செய்ய ரூ.30 லட்சம் கடன் கொடுக்கிறது.
தமிழ்நாடு அரசின் கடன் உதவி திட்டம்
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கையில், ''திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள சிறுபான்மையின நல மக்கள் பயனடையும் வகையில் 2025- 2026 ஆம் ஆண்டிற்கு மேற்படி திட்டத்தில் ரூ.300 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற வெவ்வேறு வருமானம் சார்ந்த பயனாளிகளுக்கு கடன் (ம) வட்டி விகிதங்களின் மாறுபட்ட அளவுடன் கூடிய திட்டம் 1-ல் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் கிராம, நகர்ப்புறங்களில் ரூ.3,00,000/-க்கு மிகாமல் இருக்க வேண்டும் மற்றும் திட்டம் 2ல் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் கிராம, நகர்ப்புறங்களில் ரூ.8,00,000/- வரை ஆண்டு வருமானம் இருக்க வேண்டும்.
குறைந்த வட்டியில் ரூ.30 லட்சம் கடன்
(திட்டம் 1-ன் கீழ் நன்மைகளை பெற முடியாத நபர்கள்) தனிநபர் கடன் திட்டம் 1-ன் கீழ் தனி நபர் கடன் ஆண்டிற்கு 6% வட்டி விகிதத்திலும் அதிக பட்ச கடனாக ரூ.20,00,000/-மும், தனி நபர் கடன் திட்டம் 2-இன் கீழ் ஆண்களுக்கு 8% பெண்களுக்கு 6% வட்டி விகிதத்திலும் அதிக பட்சகடனாக ரூ.30,00,000/- கடன் வழங்கப்படுகிறது. கைவினை கலைஞர்களுக்கு ஆண்களுக்கு 5%, பெண்களுக்கு 4% வட்டி விகிதத்தில் அதிகபட்ச கடனாக ரூ.10,00,000/- கடன் வழங்கப்படுகிறது. சுய உதவிக் குழுக் கடன் நபர் ஒருவருக்கு ரூ.1,00,000/- ஆண்டிற்கு 7%, வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படுகிறது. சுய உதவிக் குழுக் கடன் திட்டம் 2-இன் கீழ் ஆண்களுக்கு 10% பெண்களுக்கு 8% வட்டி விகிதத்திலும் நபர் ஒருவருக்கு ரூ.1,50,000/- கடன் வழங்கப்படுகிறது.
சிறுபான்மையின மக்களுக்கான திட்டம்
மேலும் சிறுபான்மையின மாணவ, மாணவியர் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இளங்கலை, முதுநிலை, தொழிற்கல்வி, தொழில்நுட்பக் கல்வி பயில்பவர்களுக்கு அதிகபட்சமாக கல்வி கடன் திட்டம் 1இன் கீழ் ரூ.20,00,000/- வரையில் 3%வட்டி விகிதத்திலும், கல்வி கடன் திட்டம் 2-இன் கீழ் மாணவர்களுக்கு 8% மாணவியர்களுக்கு 5% வட்டி விகிதத்திலும் ரூ.30,00,000/- வரையிலும் கல்வி கடனுதவி வழங்கப்படுகிறது.மேலும் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள சிறுபான்மையின கைவினை கலைஞர்களுக்கு தங்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு விராசாத் கடன் (கைவினை கலைஞர் கடன் திட்டம்) கைவினை கலைஞர்களுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் மூலப்பொருட்களான உபகரணங்கள்/கருவிகள்/இயந்திரங்கள் வாங்குவதற்கு இக்கடன் வழங்கபப்படுகிறது. எனவே சிறுபான்மையின மக்கள் இத்திட்டத்தை அதிக அளவில் பயன்படுத்தி கொள்ளலாம்.
கடன் விண்ணப்பங்களை எங்கு பெறுவது?
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் வசிக்கும் கிறித்தவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின் ஆகிய சிறுபான்மையினர்கள் கடன் விண்ணப்பங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகம், மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம், மாவட்ட, மத்திய கூட்டுறவு வங்கி அல்லது அதன் கிளைகள் அல்லது நகர கூட்டுறவு வங்கி அல்லது தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி ஆகிய அலுவலகங்களில் பெற்று அதனை பூர்த்தி செய்து வங்கி கோரும் உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்கலாம்.
என்னென்ன ஆவணங்கள் வேண்டும்?
கடன் விண்ணப்பத்துடன் சார்ந்துள்ள மதத்திற்கான சான்று, சாதி சான்றிதழ், வருமான சான்று, உணவு பங்கீடு அட்டை அல்லது இருப்பிடச் சான்று, ஆதார் அட்டை, கடன் பெறும் தொழில் குறித்த விவரம், திட்ட அறிக்கை மற்றும் வங்கி கோரும் இதர ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். கல்வி கடனுக்கு விண்ணப்பிக்கும் போது சிறுபான்மையினர் மதச்சான்றிதழ், சாதி சான்றிதழ். வருமான சான்றிதழ். இருப்பிட சான்றிதழ். குடும்ப அட்டை, வாழ்விட சான்று (Smart Card), ஆதார் நகல், பள்ளி மாற்று சான்றிதழ் உண்மைச் சான்றிதழ் (Bonafide Certificate) அசல், கல்விக் கட்டணங்கள் செலுத்திய இரசீது, செலான் அசல், மதிப்பெண் சான்றிதழ் மற்றும் வங்கி கோரும் இதர ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டும். சிறுபான்மையின மக்கள் டாம்கோ கடன் திட்டத்தின் கீழ் கடனுதவி பெற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது'' என்று கூறப்பட்டுள்ளது.