தட்டச்சு பிழையால் தப்பிய காமூகன்.. 2 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இறுதியில் வென்ற நீதி..!

By vinoth kumarFirst Published Jul 17, 2021, 6:57 PM IST
Highlights

இரண்டு வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியாகி உள்ளதால், வழக்கிலிருந்து பிரகாஷ் விடுதலை செய்யப்பட்ட உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளார். மேலும், 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார். 

செமன் என்ற ஆங்கில வார்த்தையை, செம்மண் என பதிவுசெய்ததை முறையாக ஆய்வு செய்யாமல், 2 வயது பெண் குழந்தையை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியவரை விடுதலை செய்த போக்சோ நீதிமன்ற உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. 

திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த தம்பதிக்கு இரண்டு வயது பெண் குழந்தை உள்ளது. கணவன் வெளியூர் சென்றிருந்ததால் தனது குழந்தையை பக்கத்து வீட்டு எஸ்.பிரகாஷ் என்பவரிடம் சொல்லி, திண்ணையில் விளையாட விட்டுவிட்டு, உணவு வாங்க தாய் கடைக்கு சென்று வந்துள்ளார். அவர் திரும்பிய நேரத்தில் குழந்தை திண்ணையில் இல்லாததால், பின்னர் தேடி கண்டுபிடித்துள்ளார். அப்போது அந்த குழந்தை, பிரகாஷ் தன்னை முத்தமிட்டதாக மழலையாக தெரிவித்த விசயங்கள் அச்சத்தை ஏற்படுத்தியதால், குழந்தையின் உடல் மற்றும் உடைகளை சோதித்துள்ளார். அப்போது, குழந்தையின் பிறப்புறுப்பில் விந்து படிந்திருந்தது தெரியவந்தது. இதை கணவனுக்கு தெரியப்படுத்தியதுடன், அக்கம்பக்கத்தினரை விழிப்படைய செய்துள்ளார்.

இரண்டு நாட்கள் கழித்து குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டிருப்பதை கண்டறிந்த மருத்துவர், உடனடியாக காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக வடுவூர் போலீசார் வழக்கு  மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. அந்த நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், புகார் அளிப்பதில் தாமதம், மருத்துவ ஆதாரங்கள் முழ்மையாக இல்லை, பிறப்புறுப்பில் செம்மண் மட்டுமே படிந்திருந்தது போன்ற காரணங்களை கூறி பிரகாஷை விடுதலை செய்து 2018ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து குழந்தையின் தாய்  சென்னை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை நீதிபதி பி.வேல்முருகன் விசாரித்து தீர்ப்பளித்துள்ளார். அவரது தீர்ப்பில், காவல்துறையை நாடி புகார் அளிப்பதில் தாமதம் மற்றும் வழக்கில் குறிப்பிடப்படும் வார்த்தைகளில் உள்ள தவறுகள் ஆகிய காரணங்களால் குற்றவாளிகள் தப்பித்து விடுவதாக குறிப்பிட்டுள்ளார். போக்சோ சட்டத்தின் நோக்கம் மற்றும் எல்லையை முழுமையாக உணராமல் கீழமை நீதிமன்றம் வழக்கை விசாரித்து தீர்ப்பளித்துள்ளதாகவும், மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகளை எவ்வாறு சாட்சியமளிக்க முடியும் என்பதை உணராமலும், அந்தக் குழந்தையின் தாயின் மனநிலையே உணராமலும் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு உள்ளதாக அதிருப்தி தெரிவித்துள்ளார்.

காவல்துறை விசாரணையின்போது தாய் அளித்த வாக்குமூலத்தில் குழந்தையின் பெண்ணுறுப்பில் விந்து படிந்திருந்தது என்று வாக்குமூலம் அளித்திருந்த நிலையில், அதன் ஆங்கில வார்த்தையை செமன் (semen) என்று குறிப்பிடுவதற்கு பதிலாக செம்மண் (semman) என்று தட்டச்சு செய்யப்பட்டதை, குற்றவாளி செம்மண் நிறத்திலான பொருள் என தனக்கு ஆதரவாக எடுத்துக்கொண்டு, ஆதாரம் இல்லை என வாதிட்டுள்ளதாகவும் தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ் வார்த்தையை ஆங்கிலத்தில் எழுதியது எழுதியதால் வழக்கின் போக்கையே மாற்றியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கல்வியறிவு குறைவாக உள்ள ஊரகப் பகுதிகளில் இதுபோன்ற சம்பவங்களில், காவல்துறை நாடுவதில் நாடுவதில் சற்று சுணக்கம் காட்டுவார்கள் என்றும், அதை ஒரு காரணமாக வைத்து குற்றத்தில் தொடர்புடைய நபரை விடுவிப்பது ஏற்கமுடியாது எனவும் நீதிபதி வேல்முருகன் குறிப்பிட்டுள்ளார். விசாரணை நீதிமன்றங்கள் தங்களுக்கான அதிகாரத்தின்படி, வழக்கு தொடர்பான ஆவணங்களை காவல்துறையிடமிருந்து பெற்று, முழுமையாக ஆய்வு செய்து மனதை செலுத்தி விசாரித்து தீர்ப்பளிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளார். 

இரண்டு வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியாகி உள்ளதால், வழக்கிலிருந்து பிரகாஷ் விடுதலை செய்யப்பட்ட உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளார். மேலும், 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார். பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான குழந்தைக்கு ஒரு லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கும்படி தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.

click me!