சாம்பல் நிற பட்டு உடுத்திய அத்திவரதர் - புதுவை முதல்வர் நாராயசாமி தரிசனம்

By Asianet TamilFirst Published Jul 28, 2019, 8:45 AM IST
Highlights

காஞ்சிபுரம், ஜூலை 28: சாம்பல் நிற பட்டு உடுத்திய அத்திவரதரை, நேற்று முன்தினம் இரவு முழுவதும் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்து சென்றனர்.

சாம்பல் நிற பட்டு உடுத்திய அத்திவரதரை, நேற்று முன்தினம் இரவு முழுவதும் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்து சென்றனர்.

காஞ்சிபும் வரதராஜ பெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் வைபவம் கடந்த 1 ம் தேதி தொடங்கி, வரும் 17ம் தேதிவரை 48 நாட்கள் நடைபெற உள்ளது. வரும் 31ம் தேதிவரை சயன கோலத்திலும், ஆகஸ்ட் 17ம் தேதிவரை நின்ற கோலத்திலும் அத்திவரதர் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.

வைபவம் தொடங்கிய முதல் நாளில் இருந்து உள்ளூர், வெளியூர், வெளிமாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாட்டில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் ஆர்வத்துடன் அத்தி வரதரை தரிசனம் செய்கின்றனர். பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்ய மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கடந்த 27 நாட்களில் 37 லட்சத்துக்கும் மேற்பட்ட அத்திவரதரை தரிசனம் செய்துள்ளனர். தினமும் ஒரு வண்ணத்தில் பட்டு உடுத்தி அருள்பாலிக்கும் அத்திவரதர், நேற்று சாம்பல் நிற பட்டு உடுத்தி, பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார். அத்திவரதர் வீற்றிருக்கும் வசந்த மண்டபம் வண்ணமலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

அத்திவரதர் வைபவம் தொடங்கி 27ம் நாளான நேற்று சனிக்கிழமை என்பதால், பெருமாளுக்கு உகந்த நாளாக கருதி நள்ளிரவு முதலே ஏராளமான பக்தர்கள் வரிசையில் காத்திருந்து அத்திவரதரை தரிசனம் செய்து சென்றனர்.

இதில், புதுவை முதல்வர் நாராயணசாமி, நடிகர் எஸ்.வி.சேகர் ஆகியோர் குடும்பத்துடன் அத்திவரதரை தரிசனம் செய்தனர்.

பெருமாளுக்கு உகந்த நாளான சனிக்கிழமை என்பதால், அத்திவரதரை தரிசனம் செய்ய நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் பக்தர்கள் காத்திருந்து நேற்று அதிகாலை வழிபட்டனர். இதற்கிடையில், பக்தர்கள் இயற்கை உபாதைகளை கழிக்க முடியாமல் அவதிப்பட்டனர்.

வெள்ளிக்கிழமை இரவு கூட்டம் அதிகமாக இருந்ததால் பக்தர்கள் கூடுதலான நேரத்துக்கு தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். நேற்று சனிக்கிழமை என்பதால், பெருமாளை தரிசனம் செய்ய நள்ளிரவு முதலே பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது. இதனால், துப்புரவு பணிகள் மேற்கொள்ள முடியவில்லை. மொபைல் கழிப்றைகளில் இருந்து கழிவுநீரும் வெளியேற்றவில்லை.

இதனால் கிழக்கு கோபுரம் பகுதியில் உள்ள கழிப்றைகளில் கடும் துர்நாற்றம் வீசியது. அவ்வழியாக நடந்து செல்பவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படும் அளவுக்கு துர்நாற்றம் வீசியது. இதை தடுக்க மாவட்ட நிர்வாகம், சுகாதாரப் பணிகளில் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

click me!