கொதிக்கும் வெயிலில் மைதானத்தில் பாடம் படிக்கும் மாணவர்கள்…. - அரசு மேல்நிலைப் பள்ளியின் அவல நிலை

By Asianet TamilFirst Published Jun 21, 2019, 4:43 PM IST
Highlights

கடலூர் மாவட்டம் விருத்தசாலம் அருகே குடிக்க தண்ணீர், படிக்க வகுப்பு அறைகள், போதிய பாதுகாப்பு இல்லாமல் அரசு பள்ளி நடத்தப்படுகிறது. இதனால், மாணவர்கள் கடும் சிரமம் அடைகின்றனர்.

கொதிக்கும் வெயிலில் மைதானத்தில் பாடம் படிக்கும் மாணவர்கள்…. - அரசு மேல்நிலைப் பள்ளியின் அவல நிலை

கடலூர் மாவட்டம் விருத்தசாலம் அருகே குடிக்க தண்ணீர், படிக்க வகுப்பு அறைகள், போதிய பாதுகாப்பு இல்லாமல் அரசு பள்ளி நடத்தப்படுகிறது. இதனால், மாணவர்கள் கடும் சிரமம் அடைகின்றனர்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே கம்மாபுரம் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்படுகிறது. இங்கு 6 முதல் பிளஸ் 2 வரை 500க்கு மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இதில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு சுற்றுச்சுவருடன் கூடிய பாதுகாப்பான கட்டிடத்தில் பாடம் நடத்தப்படுகிறது.

ஆனால், 6 முதல் 10ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு, அங்குள்ள மரத்தடி, மைதானம், பள்ளி கட்டிட வெளிப்புறம் ஆகிய பகுதிகளில் பாடங்களை நடத்தி வருகின்றனர்.

பள்ளியின் எதிரே, சிதம்பரம் - விழுப்புரம் சாலை அமைந்துள்ளது. இவ்வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. அந்த வாகனங்கள், பள்ளியின் முன் உள்ள அந்த மைதானத்தில் திரும்புகின்றன. இதனால் மாணவர்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது.

அக்னி நட்சத்திரம் முடிந்த பின்னரும், வெயில் மக்களை வாட்டி வதைக்கிறது. தண்ணீரும் இல்லாமல் மக்கள் தவிக்கின்றனர். இந்த வேளையில், கொளுத்தும் வெயிலில், மாணவர்களை உட்கார வைத்து பாடம் நடத்துகிறார்கள். மாணவர்களுக்கு குடிக்க தண்ணீர் வசதியும், இப்பள்ளியில் இல்லை.

இதனால் மாணவர்கள், அருகில் அமைந்துள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் உள்ள தொட்டியில் தண்ணீரை பாட்டிலில் பிடித்து கொண்டு, பள்ளிக்கு வந்து குடிக்கின்றனர். இதற்காக சாலையை கடக்கும்போது, மாணவர்கள் விபத்தை சந்திக்கும் நிலை உள்ளதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கும் அரசு பள்ளியில், 6ம் வகுப்புகள் மரத்தடியிலும், வராண்டாவிலும் நடைபெறுகின்றன. கோடை வெயில் தரையில் கால் வைக்க முடியாதபடி கொதிக்கும் சூழலில், மண் தரையில் அமர்ந்து படிப்பதால் மாணவ, மாணவிகளின் உடல்நலம் கடுமையாக பாதிக்கப்படுகிறது என பெற்றோர்கள் வேதனையடைகின்றனர்.

கடந்த சில மாதங்களுக்க முன், இந்த பள்ளியின் சுற்றுசுவர், சாலை விரிவாக்க பணிக்காக இடிக்கப்பட்டது. அந்த சுவரை மீண்டும் கட்டுவதற்கு நிதியும் ஒதுக்கப்பட்டது. ஆனால், மக்களவை தேர்தல் நடந்ததால், அந்த பணி இதுவரை கிடப்பில் போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

click me!