கல்லூரி மாணவர் சங்க தேர்தலில் ஜெயித்த திருநங்கைக்கு வாழ்த்து சொன்ன கனிமொழி!!

By sathish kFirst Published Jun 24, 2019, 4:56 PM IST
Highlights

லயோலா கல்லூரியில் நடைபெற்ற மாணவர் சங்கத் தேர்தலில் இணைச் செயலாளர் பதவிக்குப் போட்டியிட்டு வெற்றிபெற்ற நலீனா பிரஷீதா என்ற திருநங்கைக்கு கனிமொழி எம்பி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

திண்டுக்கல்லைச் சேர்ந்த நலீனா பிரஷீதா, 2011ஆம் ஆண்டு 11ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும்போது திருநங்கையாக மாறியுள்ளார். அவர் பெற்றோர் அவரை ஏற்றுக்கொள்ளாத காரணத்தினால் வீட்டை விட்டு வெளியே வந்த திருநங்கை  தொலைதூரக் கல்வி மூலம் உயர்நிலைக் கல்வியை முடித்த இவர், பின்னர் லயோலா கல்லூரியில் இளநிலை பட்டப்படிப்பில் சேர்ந்துள்ளார். தற்போது எம்எஸ்சி விஷுவல் கம்யூனிகேஷன் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார் நலீனா. 

கடந்த  21ஆம் தேதி நடைபெற்ற லயோலா கல்லூரி மாணவர் சங்கத் தேர்தலில், பெண்கள் போட்டியிடும் இணைச் செயலாளர் பதவிக்குப் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார் திருநங்கை நலீனா பிரஷீதா.500க்கும் மேற்பட்ட மாணவிகள் லயோலா கல்லூரியில் பயில்கின்றனர். அவர்களில் 400க்கும் மேற்பட்டோர் வாக்களிக்க வந்தனர். இதில்  திருநங்கை நலீனாவுக்கு 328 பேர் வாக்களித்துள்ளனர். இவரை எதிர்த்துப் போட்டியிட்டவர் 97 வாக்குகளைப் பெற்றுள்ளார். 231 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இந்தியாவில் மாணவர் சங்கத் தேர்தலில் ஒரு திருநங்கை வெற்றி பெற்றது இதுவே முதல்முறை என்ற பெருமையை நலீனா பெற்றுள்ளார்.

இதுகுறித்து தனியார் ஊடகத்திற்கு  பேட்டியளித்த திருநங்கை நலீனா, லயோலா கல்லூரி என்பது எனக்கு அம்மா போன்றது. இந்த கல்லூரி எனக்கு அன்பைக் கொடுத்தது மட்டுமின்றி நான் யார் என்பதை எனக்கு இன்று உணர்த்தியது.  நான் முதன்முறையாக இந்த கல்லூரியில் சேர்ந்தபோது மிகவும் கூச்சப்பட்டேன். ஆனால், எனக்கு தானாகவே நல்ல நண்பர்கள் அமைந்தார்கள். முதலில் சிலர் என்னை கேலி செய்தனர். பின்னர் நண்பர்களாக்கிக் கொண்டேன் எனக் கூறினார். தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றால் அடுத்து வரும் திருநங்கைகளுக்கு நல்ல வழிகாட்டியாக இருக்கும். திருநங்கைகள் மீதான பார்வை மாறும் என்பதற்காகத்தான் தேர்தலில் போட்டியிட்டேன் என்று பெருமிதம் தெரிவித்துள்ளார்.

சென்னை லயோலா கல்லூரி மாணவர் பேரவைத் தேர்தலில் திருநங்கை சகோதரி நளினா பிரசிதா அவர்கள் வெற்றி பெற்றிருப்பது மிகவும் மகிழ்ச்சிகரமான செய்தி. நளினா அவர்கள் இன்னும் பல வெற்றிகளை பெற்று மென்மேலும் உயர வாழ்த்துகிறேன்.https://t.co/8FdKNhEhpg

— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK)

இதுகுறித்து தூத்துக்குடி எம்பி கனிமொழி  வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்; சென்னை லயோலா கல்லூரி மாணவர் பேரவைத் தேர்தலில் திருநங்கை சகோதரி நளினா பிரசிதா அவர்கள் வெற்றி பெற்றிருப்பது மிகவும் மகிழ்ச்சிகரமான செய்தி. நளினா அவர்கள் இன்னும் பல வெற்றிகளை பெற்று மென்மேலும் உயர வாழ்த்துகிறேன். என  கூறியுள்ளார்.

click me!