மொத்த சென்னையையும் சுற்றி வளைத்த கொரோனா..! அனைத்து மண்டலங்களிலும் பாதிப்பு..!

By Manikandan S R SFirst Published Apr 23, 2020, 2:50 PM IST
Highlights

தமிழகத்தில் தலைநகர் சென்னையில் தான் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று வெளியான அறிவிப்பில் சென்னையில் மட்டும் 15 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதையடுத்து சென்னையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 373 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸின் தீவிரம் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதுவரை பாதிப்பு எண்ணிக்கை 21,363ஐ எட்டியிருக்கும் நிலையில் 681 பேர் பலியாகியுள்ளனர். தமிழகத்திலும் கொரோனா வைரஸ் பாதிப்பு அசுர வேகமெடுத்துள்ளது. நேற்று ஒரே நாளில் 33 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,629 ஆக உயர்ந்துள்ளது. இதுவரையில் 18 பேர் தமிழ் நாட்டில் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் தலைநகர் சென்னையில் தான் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று வெளியான அறிவிப்பில் சென்னையில் மட்டும் 15 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதையடுத்து சென்னையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 373 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இருக்கும் 15 மண்டலங்களில் அதிகபட்சமாக வடசென்னையின் ராயபேட்டையில் 117 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தண்டையார்பேட்டையில் 46 பேருக்கும், திரு.வி.க நகரில் 45 பேருக்கும், தேனாம்பேட்டையில் 44 பேருக்கும், கோடம்பாக்கத்தில் 36 பேருக்கும், அண்ணா நகரில் 32 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகி தீவிர சிகிச்சையில் வைக்கப்பட்டுள்ளனர்.

அதே போல திருவொற்றியூரில் 13 பேருக்கும், வளசரவாக்கத்தில் 10 பேருக்கும், பெருங்குடியில் 8 பேருக்கும், அடையார், ஆலந்தூர் பகுதியில் தலா 7 பேருக்கும், மாதவரத்தில் 3 பேருக்கும் மற்றும் சோழிங்க நல்லூரில் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியிருக்கிறது. இதுவரை சென்னையில் கொரோனா பாதிப்பு இல்லாத இடங்களாக இருந்த அம்பத்தூர் மற்றும் மணலியிலும் தற்போது கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இரு மண்டலங்களிலும் தலா ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையின் அனைத்து மண்டலங்களிலும் கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநகராட்சி எடுத்துள்ளது.

click me!