குட்நியூஸ்.. சென்னையில் 80 சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி... சுகாதாரத்துறை செயலாளர் தகவல்..!

By vinoth kumarFirst Published Aug 24, 2021, 11:59 AM IST
Highlights

சென்னையை பொறுத்தவரை 80 சதவீதம் பேருக்கு மேல் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது. விருதுநகர், தேனி, ராமநாதபுரம், தென்காசி உள்பட 10 மாவட்டங்களில் ஏற்கனவே நடத்தப்பட்ட சர்வேயில் அங்கு நோய் எதிர்ப்பு சக்தி மக்களிடம் அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் அடுத்த 6 மாதத்துக்குள் எல்லோருக்கும் தடுப்பூசி போட்டு முடிக்க இலக்கு வைத்துள்ளோம். அதுவரை நோய் கட்டுப்பாட்டு விதிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- தமிழ்நாட்டை பொறுத்தவரை கொரோனா பரவுவது கட்டுக்குள்தான் உள்ளது. நேற்று 1,604 பேருக்குதான் கொரோனா பரவியது கண்டறியப்பட்டது. 19 மாவட்டங்களில் கொரோனா தொற்று குறைந்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து நேற்று மட்டும் 1,863 பேர் குணம் அடைந்துள்ளனர்.

34 மாவட்டங்களில் 100-க்கும் கீழ்தான் கொரோனா தொற்று உள்ளது. சென்னை, கோவை, ஈரோடு, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் மட்டும் 150-க்குள் கொரோனா தொற்று பாதிப்பு உள்ளது. தமிழகத்தில் இதுவரை 2 கோடியே 87 லட்சத்து 87 ஆயிரத்து 950 பேர் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர். இதில், அரசு  மருத்துவமனையில் 2 கோடியே 68 லட்சத்து 30 ஆயிரத்து 662 பேருக்கும், தனியார் மருத்துவமனையில் 19 லட்சத்து 57 ஆயிரத்து 288 பேர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

தற்போது 12 லட்சத்து 26 ஆயிரத்து 511 தடுப்பூசிகள் கைவசம் உள்ளது. தொடர்ந்து தடுப்பூசிகள் வந்து கொண்டு இருப்பதால் பல மாவட்டங்களுக்கு கூடுதலாக தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்படுகிறது. ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களிடமும், தடுப்பூசி போட்டு கொண்டவர்களிடமும் நோய் எதிர்ப்பு சக்தி எவ்வளவு உள்ளது என்று ஒரு கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் தமிழக மக்களிடம் 66 சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி இருப்பது தெரியவந்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை 80 சதவீதம் பேருக்கு மேல் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது. விருதுநகர், தேனி, ராமநாதபுரம், தென்காசி உள்பட 10 மாவட்டங்களில் ஏற்கனவே நடத்தப்பட்ட சர்வேயில் அங்கு நோய் எதிர்ப்பு சக்தி மக்களிடம் அதிகரித்துள்ளது. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கூடுதல் தடுப்பூசி வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் குறிப்பிட்ட 10 மாவட்டங்களை தேர்ந்தெடுத்து அங்கும் நோய் எதிர்ப்பு சக்தி எந்த அளவு அதிகரித்துள்ளது என்பதை கண்டறிய சுகாதாரத்துறை பணியாளர்கள் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.

click me!