பெருமாளுக்கு ஏன் திருநாமம் முக்கியம்... அப்படி என்ன விசேஷம்?

By Dinesh TGFirst Published Oct 8, 2022, 12:07 PM IST
Highlights

கடவுளுக்கு செய்யப்படும்  எல்லாமே அர்த்தம் பொதிந்தவை.  ஆன்மிகவாதிகளுக்கு சைவம், வைணவம் இரண்டுமே இரண்டு கண்கள் போன்றது. சைவ கடவுளுக்கு விபூதி எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் வைணவ கடவுளுக்கு திருமண் எனப்படும் திருநாமம். இவை இரண்டுமே புனிதமானதாக கருதப்படுகிறது. 
 

வைணவத்தின் முதல் கடவுள் ஸ்ரீமன் நாராயணனன் என்பதை சொல்லி தெரியவேண்டியதில்லை.  வெங்கடேச பெருமாளுக்கு  எல்லா நாட்களுமே சிறப்பு தான். அதனினும் சிறப்பு புரட்டாசி மாதம். புரட்டாசி சனி  நாளான இன்று வேங்கடவனுக்கு  ஏன் திருமண் என்னும் திருநாமம் சாற்றி அதை நாமும்  வழிபடுகிறோம் என்பதை  தெரிந்துகொள்வோம். 

இதை திருமண் நாமம் திருநாமம்  என்று சொல்வதை காட்டிலும் காப்பு என்று சொல்வதே பொறுத்தமானது. திருநாமம் அணியும் ஒவ்வொருவரும்  இதை நெற்றியில் அணிந்துகொள்வதன் மூலம் மகாவிஷ்ணுவின்  நேரடியாக அவரது அடைக்காப்புக்குள் வருகிறோம். அதனால் தான் இதை திருமண் காப்பு தரித்தல் என்று வைணவர்கள் சொல்கிறார்கள். 

திருமண் என்பது திருமாலின் பாதங்களை குறிக்கும் சொல்.  இதை ஸ்ரீ சூர்ணம் என்றும் அழைக்கிறார்கள். திருமண் என்பது தமிழ்ச்சொல். சமஸ்கிருதத்தில் நாமம் என்று அழைக்கிறோம். ஸ்ரீமந் நாராயணன் வீற்றிருக்கும்   கோயில்களில் எழுந்தருளியுள்ள திவ்யமான இடத்தில் இருக்கும் மண்ணை எடுத்து அவனது நாமத்தை உச்சரித்தபடி  நெற்றியிலும் உடலிலும் இட்டுக்கொள்ள வேண்டும். இதன் மூலம் நாராயணனின் அத்தனை ஆசிகளும் நாம் பெறலாம். 

வைணவத்தில் தென்கலையினர் திருமாலின் பாதம் வைத்து திருநாமம் அணிவார்கள். வடகலையினர் பாதம் இல்லாமல் வளைவாக போடுவார்கள். பெருமாளின் நாமத்தில்  இருக்கும் இரண்டு வெண்மைக்கோடுகள் திருமாலின்  திருவடிகளை குறிக்கும். நடுவில் இருக்கும் சிவப்பு அல்லது மஞ்சள் கோடுகள் ஸ்ரீமந் நாராயணனின் துணைவியான ஸ்ரீ லஷ்மியைக் குறிக்கும். நாராயணனுக்கே உரிய  சுக்லாம் பரதரம் என்னும் ஸ்லோகமானது அவனது வெண்மையை குறிப்பதால் ஸ்ரீமந் வெண்மையானவன்  என்பதை தெரிந்துகொள்ளலாம். ஸ்ரீஸூக்ததில் தாயாரின் நிறம் சிவப்பு மற்று மஞ்சளை குறிப்பிடுவதால்  தாயாரின் நிறமும் அறிந்து கொள்ள முடிகிறது. 

திதி பார்ப்பது நல்லதா, கெட்டதா?

பெருமாளின் அருளை பெறுவதற்கு  நாம் திருநாமம் அணியும் போது  திருமாலின் 12 பெயர்களை குறிக்கும் வகையில் உடலில் மொத்தம் 12 இடங்களில் திருநாமம் இட்டுகொள்ள வேண்டும். அப்படி செய்தால்  பெருமாளின்  அன்பை பெற்றுவிடலாம். முழுமையான பலன் கிடைக்கும்.  

அதாவது நெற்றி, நடுவயிறு, நடு மார்பு, நடு கழுத்து, வலது மார்பு, வலது கை, வலது தோள், இடது மார்பு, இடது கை, இடது தோள், பின்புற அடிமுதுகு, பின்புற பிடறி போன்ற இடங்கள் ஆகும்.நமது உடலில்  ஒவ்வொரு இடத்திலும்  நாமம் இடும் போது அதற்குரிய மந்திரங்களை சொல்லி இட வேண்டும்.  அப்படி செய்தால் உரிய பலன் பெறலாம். என்ன மந்திரம் சொல்லி இட வேண்டும் என்பதை பார்க்கலாம். 

இறந்தவங்க சொர்க்கத்துக்கு போக இந்த 4 பொருள் பக்கத்துல இருக்கணுமாம்!

நெற்றி- கேசவாயநம 
நாபி- நாராயணாய நம 
மார்பு - மாதவாய நம
நெஞ்சு- கோவிந்தாய நம
வலது மார்பு - விஷ்ணவே நம
வலது புயம்- மதுஸூதனாய நம
வலது தோள்- த்ரிவிக்ரமாய நம
இடது நாபி - வாமனாய நம
இடது புயம்- ஸ்ரீதராய நம
இடது தோள்- ஹ்ருஷீகேசாய நம
பின் அடிமுதுகு - பத்மநாபாய நம
பிடரி - தாமோதராய நம என்று சொல்லி நாமம் இடவேண்டும். 

இந்த நாமத்தை அணியும் போது உவர்மண் உடையில் உள்ள அழுக்கை போக்குவது போன்று  நமது உள்ளத்தில் இருக்கும் அழுக்கும்  நீங்கிவிடுகிறது.  இந்த திருநாமம் வைப்பதன் தத்துவம் நமக்கு வாழ்வியலை உணர்த்துகிறது.  ஆம்  நமது உடலும் ஒருநாள் இந்த மண்ணோடு மண்ணாகி போகும் என்னும் பிறவி தத்துவத்தை உணர்த்துகிறது. 

பெருமாளின் ஆசியை பெறுவதற்கு திருநாமம் அணிவோம், ஸ்ரீமந் நாராயணனை  முழுமையாக சரணடைவோம்.

click me!