கணபதிக்கு ஏன் அருகம்புல்லை வைக்கின்றோம்?

By Dinesh TGFirst Published Sep 23, 2022, 1:08 PM IST
Highlights

தெய்வங்களுக்கு பிடித்தமான  பொருள்களை வைத்து வழிபட்டால் அவர்கள் மகிழ்ந்து மேன்மேலும் ஆசிர்வாதம் செய்வார்கள் என்பது நம்பிக்கை. முழு முதற் கடவுளான பிள்ளையாருக்கு பிடித்த உணவுகள் கொழுக்கட்டை, மோதகம், சுண்டல் என்பது போன்று அவருக்கு பிடித்த மாலை அருகம்புல். ஏன் அருகம்புல்லை அவருக்கு வைக்கிறோம். தெரியுமா?
 

விநாயகருக்கு அருகம்புல் உரியது. அருகம்புல் மழை இல்லாவிட்டாலும் கடுமையான கோடையைக் கூட தாங்கி நிற்கும். வெயிலில் காய்ந்து போகுமே தவிர அருகம்புல் அழிந்து போகாது. சின்னதாக மழை பெய்தால் கூட போதும் பசுமையாக துளிர் விடும்.  சாலையோரங்களில் கூட எளிதாக முளைக்கக் கூடியது. எல்லா காலக்கட்டங்களிலும் காணப்படக் கூடியது அருகம்புல்.

அப்படிப்பட்ட அருகம்புல்லை நாம் விநாயகருக்கு மாலையாக செய்து வணங்குவது வழக்கம். அதிலும் விநாயகருக்கு அருகம்புல் செலுத்தினால் சிறப்பு என்றும் முன்னோர்கள் தெரிவித்துள்ளனர். அனால் இன்றைய காலகட்டத்தில் விநாயகருக்கு அருகம்புல் செலுத்தி வந்தாலும் அதன்பின் இருக்கும் வரலாற்று கதையை பலரும் அறிந்ததில்லை. 

யமனுடைய மகன் தான் அனலாசுரன். வேண்டாத சேர்க்கையின் காரணமாக தீயவனாகி சாபம் பெற்று விட்டன. இதனால் மூர்க்கனாக மாறி தேவர்களை இம்சித்து வந்து கொண்டிருந்தான். வரங்கள் பல பெற்றதாலும், பிறப்பிலேயே அவனது உடல் பெரும் அனலைக் கக்கியதாதால் அவனுக்கு அருகில் கூட யாரும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.  செல்பவர்களை எல்லாம்  சாம்பலாக்கினான் அனலாசுரன்.

விரதம் என்றால் எதுவும் சாப்பிடகூடாதா?

இதனால் என்ன செய்வது என்று புரியாத  தேவர்கள் குழம்பிக் கொண்டிருந்தனர். அப்போது தான்  பிள்ளையாரை வேண்டி அவரது உதவியை நாடினர். கணநாதரும் அவனை ஒழித்து தேவர்களை காக்க அவனிருக்கும் இடம்  சென்றார். அங்கு கணபதியின் கணங்கள் எல்லாம் வெம்மை தாங்காமல் ஓலமிட்டன.  இதனால் கணபதியின் கோபம் எல்லை கடந்தது.

 

பின்னர் அனலாசுரனை பெரும் அனல் வடிவம் கொண்டு கணபதி தாக்க ஆரம்பித்தார். அந்த அசுரன் ஓய்ந்து போன தருணத்தில் அவனைப் பிடித்து விழுங்கி விட்டார் கணபதி. காரணம் அவனது பூத உடல் கூட பெரும் வெப்பம் கொடுத்தது உயிர்களை வாட்டும் என்பது தான். அனலோடு அவன் விழுங்கப்பட்டதால், கணபதியின் வயிறு எரிந்து கொண்டிருந்தது. உஷ்ணம் தாங்காத கணநாதர் சக்தியை எண்ணி வணங்கினார். தேவர்கள் யாவரும் கணநாதரை குளிர்விக்கும் வகையில் என்ன என்னவோ செய்து பார்த்தார்கள். கங்கை நீரை ஊற்றினார்கள். பனிப்பாறையைப் பெயர்த்தெடுத்து கணபதியின் தலையில் வைத்தார்கள். எதிலுமே இந்த தீயானது தணியவில்லை.

Navratri : தமிழகத்தில் நவராத்திரி கொண்டாட்டம்

இதற்கிடையில் தான், சப்த ரிஷிகள் எனப்படும் அத்திரி, பிருகு, குத்ஸர், வசிஷ்டர், கவுதமர், காஸ்யபர், ஆங்கிரஸர் ஆகிய எழுவரும் சேர்ந்து ஒரு சாண் அளவுள்ள இருபத்தொரு அருகம்புற்களைக் கொண்டு வந்து கணபதியின் தலையில் வைத்தனர். இதனால் கணபதியின் உடல் குளிர்ந்து, வயிற்றில் இருந்த அனல் தணிந்து விட்டது. இதனால் விநாயகர் மகிழ்ந்தார். தனக்கான பூஜைப்பொருள் அருகம்புல்லே என்று மனம் மகிழ்ந்து ஏற்றுக்கொண்டார்.

‘இனி தன்னை வணங்கிட வருவபர்கள், வரத்தைப் பெற விரும்புவோர்கள் என அனைவரும் அருகம்புல் கொண்டு வணங்கினால் மகிழ்வேன்’ என்று வரமளித்தார் பிள்ளையார். அன்று முதல் கணபதியின் பூஜைக்கு உரியதானதாக மாறியது அருகம்புல். தூர்வை, மேகாரி, பதம், மூதண்டம் என பல பெயர்களால் சிறப்பிக்கப்படும் அருகம்புல் கணநாதருக்கு மட்டும் அல்ல, மூலிகையாக எடுத்துக் கொண்டால் நமக்கும் நலம் பயப்பவை தான். எல்லா கோயில்களிலும் முழு முதற் மூர்த்தியாக விளங்கும் பிள்ளையாரை முதலில் வணங்கி வேண்டியதை பெறுவோம். அவரது அருளை பெற அருகம்புல்லுடன் கோவிலுக்கு செல்வோம். 

click me!