வைகாசி விசாகம் 2023: நினைத்த காரியம் நிறைவேற இப்படி விரதமிருந்தால் முருகபெருமான் அருளை வாரி வழங்குவார்!!

By Ma riyaFirst Published May 31, 2023, 10:23 AM IST
Highlights

Vaikasi Visakam 2023 : வைகாசி விசாகம் முருகப் பெருமானுக்குரிய விரத நாள். இந்நாளில் பக்தர்கள் பால் குடம் ஏந்தியும், பால் காவடி எடுத்தும் முருகன் பாதம் பணிந்து வழிபடுவார்கள். 

முருகப்பெருமானுக்கு உகந்த நட்சத்திரங்கள் கிருத்திகை, பூசம், விசாகம். இந்த 3 நட்சத்திரங்களும் பௌர்ணமி அன்று இணைந்து வரும் நாள் முருகனுக்கு விரதம் இருக்க ஏற்ற நாளாக சொல்லப்படுகிறது. அந்த வகையில் வைகாசி மாதம் வரும் பௌர்ணமி வைகாசி விசாகம் என அழைக்கப்படுகிறது. இந்த நன்னாளில் தான் முருகப்பெருமான் அவதரித்தார் என்றும் சொல்லப்படுகிறது.  

நவக்கிரகங்களில் முருகபெருமான் செவ்வாயின் அதிபதி ஆவார். வீரம், வீட்டு மனை, வாகனம், ரத்த உறவுகள், செல்வம் ஆகியவற்றுக்கு முருகன் அதிபதியாகவுள்ளார். ஜோதிட சாஸ்திரத்தின்படி விசாகம் நட்சத்திரத்திற்கு குரு பகவான் தான் அதிபதி. வைகாசி விசாகம் அன்று விரதம் இருந்து வழிபாடு செய்தால் உங்களுடைய வேண்டுதல்கள் விரைவில் நிறைவேறும் என்பது ஐதீகம். இது தவிர ஞானம், செல்வம், ஆரோக்கியம் மேம்பட்டு நீண்ட ஆயுள் பெற, திருமண தடை நீங்க, குழந்தை வர பெற என வைகாசி விசாக நாளில் எல்லா வேண்டுதல்களுக்காகவும் முருகப் பெருமானுக்கு விரதம் இருக்கலாம். 

வைகாசி விசாகம் 2023 எப்போது?

ஆண்டுதோறும் மே மாதம் அல்லது ஜூனில் வைகாசி விசாகம் கொண்டாடப்படுகிறது. இந்தாண்டில் வைகாசி விகாசம் வருகின்ற ஜூன் 2 ஆம் தேதி காலை 05.55 மணிக்குத் தொடங்கி, ஜூன் 3 ஆம் நாள் காலை 05.54 மணிக்கு நிறைவடைகிறது. முருகனுக்கு வைகாசி விசாக விரதமிருக்க நினைப்பவர்கள் ஜூன் 2ஆம் தேதி இருக்கலாம். 

வைகாசி விசாகம் சிறப்புகள்

  1. வைகாசி விசாகம் அம்மனிடமிருந்து முருகபெருமான் சக்தி பெற்ற நாள். 
  2. மகாபாரத புராணத்தில் வில் வித்தையில் சிறந்து விளங்கிய அர்ஜுனன் சிவனிடமிருந்து வரமாக பாசுபத ஆயுதம் பெற்ற நாள்.
  3. இந்த நாளிலே தான் பல்வேறு முருகன் கோயில்களில் மகா உற்சவம் நடத்தப்படும். பக்தர்கள் பரவசமாக காணப்படுவார்கள். முருகன் அவதரித்ததாக நம்பப்படும் வைகாசி விசாக நாளில் பிறக்கும் குழந்தைகள் அறிவுக்கூர்மையுடன், புகழின் உச்சத்தை அடையும் திறனுடையவர்களாக பிறப்பார்கள் என்பது நம்பிக்கை. 
  4. வைகாசி விசாகம் அன்று அதிகாலை எழுந்து நீராடி விட்டு பூஜை அறையில் சென்று பிரார்த்தனை செய்து வழிபட்டால் எல்லா வளமும் கிடைக்கும் என்பது ஐதீகம். தினத்தில் நாமும் விரதம் இருந்து முருகப் பெருமானை வணங்கினால் ஞானமும், எல்லா வகை செல்வமும் கிடைத்து சிறப்பாக வாழலாம். 

விரதத்தில் சொல்ல வேண்டியது: 

வைகாசி விசாகம் அன்று முருகப் பெருமானின் அருளை பூரணமாக பெற கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம், திருப்புகழ் போன்றவை பாராயணம் செய்யலாம். முருகனிடம் சஷ்டி கவசம் சொல்ல தெரியாதவர்கள் "சரவண பவ"எனும் ஆறெழுத்து மந்திரத்தை மனதார உச்சரித்தாலே முருகனின் கடைக்கண் பார்வை நம் மீது விழும். 

இதையும் படிங்க: ஜூன் மாதத்தில் வரும் முக்கிய விசேஷ நாட்களும் விரத நாட்களும்!! மிஸ் பண்ணிடாதீங்க!!

click me!