
ஸ்ரீ மாதா அம்ருதானந்தமயி தேவி அவர்கள், தனது தென்னிந்திய சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக சென்னைக்கு விஜயம் செய்துள்ளார். ஐந்து ஆண்டு நீண்டஇடைவெளிக்கு பிறகு, வந்த அம்மாவை பாரம்பரிய பூர்ண கும்ப மரியாதைகளுடன் சுவாமி வினயாம்ருதானந்தபுரி அவர்கள் சென்னை பக்தர்களின் சார்பில் வரவேற்றார். அம்மாவுடன் ஆயிரக்கணக்கான துறவிச்சீடர்கள், பிரம்மச்சாரிகள் மற்றும் ஆசிரம வாசிகள் சென்னை வந்து சேர்ந்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து சென்னை விருகம்பாக்கத்தில் 1990-ஆம் ஆண்டு அம்மாவால் பிரதிஷ்டை செய்யப்பட்ட பிரம்மஸ்தான ஆலயத்தின் 35-வது பிரம்மஸ்தான மஹோத்சவமானது வெகு சிறப்பாக நடைபெற உள்ளது. இந்நிகழ்வானது நகரை ஆன்மீக உணர்வால் நிறைக்க உள்ளது.
பிப்ரவரி 17-ஆம் தேதி, காலை 11:00 மணிக்கு, மேடைக்கு வருகைத் தரவிருக்கும் அம்மாவின் வழிகாட்டுதலின் படி தியானம், அருளுரை மற்றும் பஜனைகள் இடம்பெற்ற உள்ளன. தொடர்ந்து அம்மா தன்னைக் காண வந்த ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு தமது அன்பு கலந்த அரவணைப்பை வழங்குவார். இரண்டு நாட்கள் நடைபெறவிருக்கும் இவ்விழாவில் சனி மற்றும் ராகு தோஷ நிவாரண பூஜைகள் பிரம்மஸ்தான ஆலயத்தில் நடைபெற உள்ளன.
சிறப்பு விருந்தினர்களின் சம்பிரதாய வரவேற்புடன் இந்நிகழ்வு தொடங்கியது. அனைத்து பக்தர்களுக்கும் இலவச உணவு (அன்னதானம்) வழங்குவது உட்பட பெரிய கூட்டத்திற்கு இடமளிக்கும் வகையில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து பிப்ரவரி 20ம் தேதி மாலை 6 மணியளவில், கரூர் செம்மடையில் அமைந்துள்ள அம்ருதாவித்யாலயம் பள்ளி வளாக மைதானத்தில் நடைபெறவிருக்கும் பொது நிகழ்ச்சிக்கு அம்மா விஜயம் செய்ய உள்ளார். அங்கு அம்மாவின் அருளுரை, தியானம், பஜனை மற்றும் தரிசன நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
இந்திகழ்வில் அனைவரும் கலந்து கொண்டு அம்மாவின் திருவருளையும், மன அமைதியினையும் பெறுவதற்கு அன்புடன் அழைக்கின்றோம்.