திருப்பதிக்கு போறீங்களா.. அப்ப பெருமாளுக்கு முன்னாடி இவர வழிபடுங்க!!

By Dinesh TGFirst Published Sep 24, 2022, 12:05 PM IST
Highlights

திருப்பதிக்கு செல்லும் பக்தர்கள் பலர் ஏழுமலையானை தரிசித்த பிறகு அவருக்காக தாங்கள் கொண்டு சென்ற காணிக்கையை உண்டியலில் சேர்ப்பது வழக்கம். ஆனால் பெருமாளை தரிசிப்பதற்கு முன்பே மற்றொரு மூர்த்தியை நாம் தரிசித்து வழிபடுவது முக்கியமானது. அவர் தான் வராக மூர்த்தி. ஏன் வராக மூர்த்தியை முதலில் தரிசிக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
 

திருப்பதியில் பெருமாள் எழுந்தருள்வதற்கு முன்பாக அங்கு எழுந்தருளியவர் தான் வராக மூர்த்தி. இவர் இங்கு எழுந்தருளியதற்கு ஒரு வரலாறு இருக்கிறது. வைகுண்டவாசனை தரிசிப்பதற்காக முனிவர்கள் எல்லாம் வைகுண்டம் சென்றுள்ளனர். ஆனால் அங்கு நாராயணன் மகாலட்சுமியோடு ஏகாந்தமாக இருந்த காரணத்தால், துவாரபாலகர்கள் முனிவர்களை உள்ளே அனுமதிக்கவில்லை. இதனால் கோபம் கொண்ட முனிவர்கள் துவார பாலகர்கள் இருவருக்கும் பூமியில் பிறக்கும் படி சாபம் அளித்தனர்.

தன்னை காண முனிவர்கள் வந்திருப்பதை உணர்த்த நாராயணன், அவர்களை வரவேற்க வந்தார். அப்போது துவார பாலகர்கள் தங்களுக்கு முனிவர்கள் அளித்த சாபம் குறித்து பகவானிடம் முறையிட்டனர். ஆனால் பகவானோ, முனிவர்கள் அளித்த சாபத்தை என்னால் நீக்க முடியாது. ஆதலால் நீங்கள் பூமியில் பிறப்பெடுத்தே ஆக வேண்டும். நீங்கள் மீண்டும் என்னை வந்தடைய இரண்டு வழிகள் இருக்கிறது. ஒன்று நீங்கள் நல்லவர்களாக தொடர்ந்து பல பிறவிகள் எடுத்து பின் என்னை வந்தடையலாம் அல்லது தொடர்ந்து மூன்று பிறவிகள் அசுரர்களாக பிறந்து என்னால் வதம் செய்யப்பட்டு மீண்டும் என்னை வந்தடையலாம். எதை நீங்கள் விரும்புகிறீர்கள் என்று நாராயணன் கேட்க, எங்களால் உங்களை வெகு காலம் பிரிந்திருக்க முடியாது ஆகையால் நாங்கள் அசுரர்களாவே பிறந்து விரைவில் உங்களை வந்தடைய விரும்புகிறோம் என்று அவர்கள் தெரிவித்தனர். 

துவாரபாலகர்களின் முதல் பிறவி தான் இரண்யாட்சன் மற்றும் இரண்யகசிபு. இவர்களில் இரண்யாட்சனை வதம் செய்ய தோன்றிய அவதாரம் தான் வராக அவதாரம். அந்த அசுரனை வதம் செய்த பிறகு, பிரம்மன், இந்திரன் உள்ளிட்ட தேவர்கள் வராக மூர்த்தியை மக்களின் நன்மைக்காக பூமியில் இருந்து அருள்பாலிக்க வேண்டும் என்று வேண்டினர். அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க சேஷாத்ரி மலையில் அவர் வராக மூர்த்தியாக எழுந்தருளினார்.

துவாபரயுகத்தில் கண்ணன் கூறியபடியே யசோதை தன் உடலை விட்டு கலியுகத்தில் வகுளாதேவியாக அவதாரம் எடுத்தாள். அவள் அந்த அவதாரத்தில் வராக மூர்த்திக்கு பல சேவைகளை செய்துகொண்டிருந்தாள். இது ஒருபுறம் இருக்க மும்மூர்த்திகளையும் சோதனை செய்யும் பொருட்டு பிருகுமாமுனி நாராயணனின் மார்பில் எட்டி உதைக்க, இதனால் மகாலட்சுமி நாராயணன் மீது கோபம் கொண்டு அவரை விட்டு பிரிந்து சென்றால். மகாலட்சுமி தன்னை விட்டு பிரிந்ததால் அவரை தேடி சென்றார் நாராயணன். அப்போது அவர் சேஷாத்ரி மலையை வந்தடைய அவருக்கு தங்க இடம் இல்லாததால் பாம்பு உருவம் எடுத்து ஒரு புற்றில் வாழ்ந்து வந்தார். அப்போது ஒருவன் அந்த புற்றை இடிக்கயில் பாம்பாய் வாழ்ந்த நாராயணனுக்கு காயம் ஏற்பட, அந்த காயத்திற்கு மருந்து தேடி அலைகளில் வராக மூர்த்தியின் ஆசிரமத்தை அடைந்தார்.

Navratri : தமிழகத்தில் நவராத்திரி கொண்டாட்டம்

நாராயணனை அடையாளம் கண்டுகொண்ட வராக மூர்த்தி அவரை அன்பாக வரவேற்று உபசரித்தார். அப்போது நாராயணன், வராகமூர்த்தியே உங்கள் சொத்தான இந்த மலையில் சில காலம் தங்க எனக்கு இடம் தாருங்கள் என்று கேட்டார். அதற்கு வராக மூர்த்தி, உங்களின் நிலை எனக்கு புரிகிறது நாராயணா. ஆனால் என்னால் இலவசமாக இடம் தர முடியாது. நீங்கள் பணம் கொடுத்தால் நான் இடம் தருகிறேன் என்றார். 

கோவிலில் தரும் எலுமிச்சையை என்ன செய்வது?

மகாலட்சுமி என்னை விட்டு பிரிந்ததால் என்னிடம் இப்போது எந்த செல்வமும் இல்லை. ஆகையால் அதற்கு பதிலாக என்னை காண வரும் பக்தர்கள் அனைவரையும் உங்களை தரிசித்த பின்பே என்னை தரிசிக்க சொல்கிறேன் என்றார். வராக மூர்த்தியும் இதற்கு ஒப்புக்கொண்டு பெருமாலிற்கு இடம் கொடுத்தார். பெருமாள், வராக மூர்த்திக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றும் பொருட்டு நாம் வராக மூர்த்தியை தரிசித்த பிறகே வெங்கடேச பெருமாளை தரிசிக்க வேண்டும்.

இனி திருப்பதிக்கு போகும் போது வராக மூர்த்தியை தரிசித்துவிட்டு செல்லுங்கள். 

click me!