வாங்கிய மனையில் வீடு கட்ட என்னென்ன விதிமுறைகளை பின்பற்றணும்? ஏன்?

Asianet News Tamil  
Published : Nov 06, 2017, 02:34 PM ISTUpdated : Sep 19, 2018, 01:24 AM IST
வாங்கிய மனையில் வீடு கட்ட என்னென்ன விதிமுறைகளை பின்பற்றணும்? ஏன்?

சுருக்கம்

what are the rules to build house

 

வீடு கட்ட வேண்டும் என மனையை வாங்கிவிட்டீர்கள். நாம் வாங்கும் மனையை முழுவதுமாக பயன்படுத்தி வீடு கட்டுவதற்கு முன்பு விதிமுறைகளை அறிந்து கொள்வது அவசியம்.

உள்ளாட்சி அமைப்புகளில் பின்பற்றப்படும் விதிமுறைகளைப் பின்பற்றித்தான் வீடு கட்ட வேண்டும். பொதுவாக எவ்வளவு மனை அளவு வைத்திருக்கிறோமோ, அந்த அளவில் வீடு கட்ட விதிமுறைகள் அனுமதிப்பதில்லை.

1,200 சதுர அடி மனை வாங்கினாலும், அதன் முழுவதும் வீடு கட்ட முடியாது. நான்கு பக்கங்களிலும் இடம் விட்டு நடுவில்தான் வீடு கட்ட வேண்டும். 

இதுதான் விதி. எவ்வளவு இடம் விட வேண்டும் என்பதெல்லாம் இடத்துக்குத் தகுந்தாற் போல் மாறுபடும். அதாவது மாநகராட்சி பகுதிகள் என்றால் ஒரு விதம், நகராட்சி பகுதிகளுக்கு ஒரு விதம் என அதற்கு வரைமுறைகள் உள்ளன.

மனையில் வீட்டின் பின் பக்கம் எவ்வளவு இடம் விட வேண்டும் என்றும் விதிமுறை இருக்கிறது. அது மனையின் அளவைப் பொறுத்தது. எதற்காக இடம் விடச் சொல்கிறார்கள் என்றால், வண்டி நிறுத்துவதற்காகவும், காற்றோட்டமாக இருப்பதற்காகவும், மரம், செடி வளர்க்க வேண்டும் என்பதற்காகவும்தான். 

மாடியில் வீடு கட்ட வேண்டும் என்றால், அதற்கு இன்னொரு விதிமுறை இருக்கிறது. அதை எஃப். எஸ்.ஐ (ஃப்ளோர் ஸ்பேஸ் இண்டெக்ஸ்) என்று சொல்வார்கள். இந்த விதிமுறையின் படித்தான் மாடியில் கட்டடத்தை எழுப்ப வேண்டும்.

நம் சொந்த மனையில் வீடு கட்டுவதற்கு இத்தனை விதிமுறைகள் உள்ளதா? என்று மலைக்க வேண்டாம். இதோடு இந்தப்பணி முடிந்து விடுவதில்லை. எவ்வளவு மனை அளவில் வீடு கட்டுகிறோம் என்பதை முடிவு செய்த பிறகு, அதை பிளானாக மாற்றி சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பில் அனுமதி பெற வேண்டும். 

அதுதான் முக்கியம். அதற்கு முன்பாக வீடு கட்டும் பிளானுக்கு அங்கீகாரம் பெற வேண்டும். இந்த அங்கீகாரம் பெற அரசு அங்கீகாரம் பெற்ற பொறியாளரிடம் அந்த பிளானைக் காட்டி கையொப்பம் பெற வேண்டும்.

பின்னர் அதை மூன்று நகல்கள் எடுத்து விண்ணப்பத்தோடு இணைத்து உள்ளாட்சி அமைப்பில் சமர்ப்பிக்க வேண்டும். பிளானில் மழைநீர் சேமிப்புக்கான வசதி இருக்கிறதா என்று அதிகாரிகள் பார்ப்பார்கள்.

இந்த அனுமதி கிடைக்க குறைந்தபட்சம் ஒரு மாதமாவது ஆகும். அனுமதி வந்த பிறகே கட்டுமான பணிகளை தொடங்க வேண்டும். பிளானில் எப்படி உள்ளதோ அது போலவே வீடு கட்டுவது நல்லது.

பிளானுக்கு மாறாக வீடு கட்டினால், அதிகாரிகள் ஆய்வு செய்யும் போது பிரச்சனைகள் ஏற்படலாம். அப்படி இல்லையென்றால், பல காலத்துக்குப் பிறகு வீட்டை விற்கும் போதோ அல்லது மாடி வீடு கட்டுவதற்கு வங்கியில் கடன் கேட்கும் போதோ பிரச்சனைகள் ஏற்படலாம்.

PREV
click me!