
தூத்துக்குடி நீதிமன்றத்தில் யூடியூபர் மாரிதாஸ் மீது திமுக தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை ரத்தி செய்து உத்தரவிட்டது.
மதுரையைச் சேர்ந்தவர் யூடியூபர் மாரிதாஸ். தீவிர பாஜக ஆதரவாளரான அவர், திமுகவுக்கு எதிராக மாரிதாஸ் பல வீடியோக்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளார். கடந்த டிசம்பரில் குன்னூரில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் மரணமடைந்தது குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை ட்விட்டரில் பதிவிட்டதாகப் புகார் எழுந்தது. இதனையடுத்து மாரிதாஸை மதுரை சைபர் கிரைம் போலீஸார் கைது செய்தனர். இதேபோல 2020-ஆம் ஆண்டில் கொரோனா வைரஸ் பரவல் தொடங்கியபோது. தப்லிக் ஜமாத் குறித்தும் கொரோனா பரவலுக்கு அவர்கள் காரணம் என்பது போலவும் வீடியோ பதிவிட்டார். இதுதொடர்பாக நெல்லை மாவட்டம், மேலப்பாளையம் போலீஸார் பதிவுசெய்த வழக்கிலும் மாரிதாஸ் கைது செய்யப்பட்டார்.
இந்த ஒரு வழக்குகளையும் ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் மாரிதாஸ் மனுத்தாக்கல் செய்தார். இந்த இரு வழக்குகளையும் விசாரித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், வழக்குகளை ரத்து செய்து உத்தரவிட்டார். இந்நிலையில், தூத்துக்குடி நீதிமன்றத்தில் மாரிதாஸுக்கு எதிராக நிலுவையில் உள்ள வழக்கை ரத்துசெய்யக் கோரி, மாரிதாஸ் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்தார். அதில், “வீடுகளில் சிஏஏ எதிர்ப்பு கோலம் போட்டது தொடர்பாக வீடியோ வெளியிட்டிருந்தேன். அது திமுகவை களங்கப்படுத்தியதாகக் கூறி, திமுக மாணவரணியைச் சேர்ந்த உமரிசங்கர் என்பவர் எனக்கு எதிராக தூத்துக்குடி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும்” என மாரிதாஸ் கோரியிருந்தார்.
இந்த வழக்கை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்து வந்தார். வழக்கின் மீதான தீர்ப்பை தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், ‘மாரிதாஸுக்கு எதிரான தூத்துக்குடி நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை ரத்து செய்து’ நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் இன்று உத்தரவிட்டார். இந்த வழக்கிலிருந்து விடுபட்டது தொடர்பாக மாரிதாஸ் ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். அதில், “திமுக கட்சி தூத்துகுடி நீதிமன்றத்தில் மாரிதாஸ் மீது தொடர்ந்த மேலும் ஒரு அவதூறு வழக்கை இன்று (10.02.2022) ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது உயர் நீதிமன்றம்.” என்று மாரிதாஸ் குறிப்பிட்டுள்ளார்.