பூஜையின் போது காளி மாதா சிலையை கட்டிப் பிடித்த இளைஞன்.. பந்தாடிய பக்தர்கள்.. பஞ்சாபில் பதற்றம்..

By Ezhilarasan BabuFirst Published Jan 25, 2022, 11:39 AM IST
Highlights

சம்பவ இடத்தில் இருந்த பெண் காவலர் உடனடியாக கோட்வாலி  காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த இளைஞனை கைது செய்தனர். இதுவரை அந்த இளைஞன் யார் எங்கிருந்து வந்தான் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த இளைஞனின் செயலால் பாட்டியாலா முழுவதும் பதற்றம் தொற்றிக்கொண்டது. 

பூஜை நடந்து கொண்டிருக்கும் போது திடீரென இளைஞர் ஓடிவந்து காளிமாதா சிலையை கட்டிப் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அங்கிருந்த பக்தர்கள் அந்த இளைஞரை சரமாரியாக அடித்து உதைத்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். பஞ்சாப் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில் இந்த சம்பவம் அங்கு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பல இந்து அமைப்புகள் இதற்கு காரணமான அந்த இளைஞனையும் அவனின் பின்னணியில் உள்ளவர்களையும் கண்டுபிடித்து  கடும் தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

சமீபகாலமாக நாட்டில் மத வெறுப்பு பிரச்சாரங்கள் மத வெறுப்பு பேச்சுகள் அதிகரித்துள்ளன. ஒரு மதத்தை இன்னொரு மதத்தினர் இழிவாகப் பேசுவதும், மத நம்பிக்கைகளை கொச்சைப்படுத்துவது அதிகரித்துள்ளது. குறிப்பாக பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் இதுபோன்ற சம்பவங்கள் நாட்டில் அதிகரித்துள்ளதாகவும் மோடி ஆட்சிக்கு வந்தபின்னர் சட்டவிரோதமாக பசுக்களை கடத்துவதாக அல்லது மாட்டிறைச்சி சாப்பிட்டதாக சந்தேகத்தின் பெயரில் பல்வேறு இஸ்லாமிய மற்றும் தலித் இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. தீவிர இந்து வலதுசாரி குழுக்கள் இஸ்லாமியர்கள் லவ் ஜிஹாதில் ஈடுபடுவதாக கூறிய அவர்களை குறிவைத்து தாக்கி வருகின்றனர். இந்தியாவில் கொரோனா பரப்பியதே இஸ்லாமியர்கள் தான் என்ற பிரச்சாரத்தையும் பாஜகவினர் முன்னெடுத்தனர். வெள்ளிக்கிழமை தொழுகை நடத்தும் இஸ்லாமியர்கள் குறிவைத்து தாக்கப்படுவதும் தொடர்கதையாகி வருகிறது. இது ஒருபுறமிருக்க ஆங்காங்கே மத தீவிரவாத நடவடிக்கைகளும் நடந்து வருவதை காண முடிகிறது. இந்த நெருக்கடிக்கு மத்தியில் உத்தரபிரதேசம், பஞ்சாப், கோவா உள்ளிட்ட ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்கள் வரும் பிப்- 10 ஆம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது.

அதற்கான பிரச்சாரங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் சமூகப் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையிலான அதிர்ச்சி சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.  பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் உள்ள புகழ்பெற்ற காளி மாதா கோவிலில் காளி மாதாவுக்கு யாகம் நடந்து கொண்டிருந்தபோது இளைஞர் ஒருவர் காளி மாதா சிலையை கட்டி பிடித்த சம்பவம் தான் அது. அதை கண்டு ஆத்திரமடைந்த பக்தர்கள் அந்த இளைஞனை  அடித்து உதைத்து போலீசிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த கோவில் கமிட்டியினர் மற்றும் அங்கிருந்த பக்தர்கள் கோவில் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பஞ்சாப் முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான கேப்டன் அமெரிக்கா இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். 

திங்கட்கிழமை மதியம் 2 மணி அளவில் பஞ்சாப் மாநிலத்தில் புகழ்பெற்ற காளி மாதா கோயிலில் காளி மாதாவுக்கு பூஜை நடந்து கொண்டிருந்தது. அப்பொழுது அங்கிருந்த ஒரு இளைஞன் கைக்குட்டையை வாயில் கட்டிக்கொண்டு கோவிலுக்குள் நின்றுகொண்டிருந்தார். ஆரஞ்சு நிற பேண்ட் மற்றும் ஜாக்கெட் அணிந்திருந்த அந்த இளைஞன், முகத்தை மறைத்திருந்ததால் கொரோனா காரணமாக அப்படி இருக்காலம் என கோவில் கமிட்டி உறுப்பினர்கள் பெரியதாக கண்டு கொள்ள வில்லை. பூஜையின்போது சிலை முன் சிறிது நேரம் நின்று கைதட்டிய அந்த இளைஞன், யாரும் எதிர்பாராத வகையில் திடீரென பீடத்தின் மீது ஏறி அலங்கரிக்கப்பட்டிருந்த  காளிமாதா சிலையை கட்டி தழுவினான். அந்த இளைஞனின் இந்த செயலை பார்த்து அங்கிருந்தவர்கள் பதறினர். அங்கிருந்த குருக்கல்கள் அதிர்ச்சி அடைந்தனர். இருக்கைகளில் அமர்ந்திருந்த பூசாரிகள் உடனடியாக அந்த இளைஞனை சிலையிலிருந்து பிடித்துக் கீழே தள்ளினர். அங்கிருந்த பண்டிதர்களும் மற்றும் பக்தர்களும் காளி மாதா சிலையை கட்டி அவமதித்த அந்த இளைஞனை சரமாரியாக அடித்து உதைத்தனர்.

சம்பவ இடத்தில் இருந்த பெண் காவலர் உடனடியாக கோட்வாலி  காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த இளைஞனை கைது செய்தனர். இதுவரை அந்த இளைஞன் யார் எங்கிருந்து வந்தான் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த இளைஞனின் செயலால் பாட்டியாலா முழுவதும் பதற்றம் தொற்றிக்கொண்டது. இச்சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் பல இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் காளிமாதா கோயிலுக்கு முன் திரண்டனர். இச்சம்பவத்தை கண்டித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர், அங்கு பதற்றம் அதிகரித்ததையடுத்து ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட இந்து தலைவர் காக்கி பண்டிட் என்பவர், கடவுளை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்ட அந்த இளைஞன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரினார். அடுத்த 24 மணி நேரத்திற்குள் அம்மன் சிலையை அவமதித்த இளைஞர் மீது நிர்வாகம் நடவடிக்கை எடுக்காவிட்டால், கோவிலுக்கு வெளியே தனது ஆதரவாளர்களுடன் தற்கொலை செய்து கொள்வேன் என்றும் அவர் மிரட்டல் விடுத்தார்.

இந்நிலையில் பாட்டியாலா முழுவதும் இன்று பந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்து தக்த், மற்றும் இந்து சுரக்ஷா சமிதி,  காளி மாதா சிலையை அழிக்கும் நோக்கில் அந்த இளைஞன் பீடம் ஏறியதாக குற்றம்சாட்டினர். இவ்விவகாரத்தில் போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், அந்த இளைஞனுக்கு பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என  வலியுறுத்தியுள்ளனர். இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வரும், லோக் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான கேப்டன்  அமரீந்தர் சிங், இந்த சம்பவத்தை கடுமையாக கண்டித்துள்ளார். தனது சொந்த நகரமான பாட்டியாலாவில் நடந்த இந்த செயல் சகிக்க முடியாதது, பஞ்சாப் மாநிலத்தின் சூழலை கெடுக்கும் நோக்கில் இந்த சதி நடந்துள்ளது. இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். 
 

click me!