விற்கப்பட்டது ஏர் இந்தியா விமானம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியர்களின் தன்மானமும் தான்
விற்கப்பட்டது ஏர் இந்தியா விமானம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியர்களின் தன்மானமும் தான் என புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “130 விமானங்கள், உள்நாடு மற்றும் வெளிநாட்டு வழித்தடங்களில் நன்கு அனுபவமும் பயிற்சியும் பெற்ற ஆயிரக்கணக்கான விமான ஓட்டிகள் மற்றும் பணிப்பெண்கள், 30,000-க்கும் மேற்பட்ட இதரப் பணியாளர்கள், 4400 உள்நாட்டு விமானத் தளங்களில் இறங்கி - ஏறும் அனுமதி, 1800 விமான நிலையங்களில் விமானங்களை நிறுத்த அனுமதி, 900 சர்வதேச விமானத் தளங்களைப் பயன்படுத்தும் வசதி, ஒரே நேரத்தில் 10 விமானங்கள் தரையிறங்கவும், புறப்படவும் வசதியுடைய பரந்துபட்ட ஓடுதளங்களைக் கொண்ட, உலக பிரசித்தி பெற்ற இலண்டன் Heathrow விமான நிலையத்தில் நமது விமானங்களை நிறுத்தி வைப்பதற்கான பிரத்யேக வசதி போன்ற எண்ணிலடங்கா சிறப்பம்சங்களைக் கொண்ட, இந்திய மகாராஜாக்களே வரவேற்கிறார்கள் என்பதைப் போன்று பொருளுடைய இலச்சினையைக் (Logo) கொண்ட, இந்திய வான்வெளிப் போக்குவரத்தின் அடையாளமாகத் திகழும் ஏர் இந்தியா நிறுவனம் தனியாருக்கு கைமாறிப் போனது, ஏர் இந்தியா (Air India) விமான நிறுவனத்தை விற்பதைப் போன்ற உணர்வாக அல்ல, இந்தியாவையே ஏலத்திற்கு விட்டதைப் போன்ற ஒரு சொல்லமுடியாத ஆதங்கமும் மனக்கவலையும் ஒவ்வொரு இந்தியரின் ஆழ்மனதில் எழாமல் இல்லை.
ஒரு விமானத்தின் விலை சராசரியாக ரூ.400 கோடி என்று எடுத்துக் கொண்டால், 130 விமானங்களின் விலை ரூ.52,000 கோடி ஆகும். ஏர் இந்தியா மற்றும் இந்தியன் ஏர்லைன்ஸ்( Indian Airlines) நிறுவனங்களுக்கு, கூட்டாக இந்தியா முழுவதும் உள்ள அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் மதிப்பீடு பல்லாயிரம் கோடிகைளைத் தாண்டும் என்று ஒரு கணக்கீடு சொல்கிறது.
ஆயிரக்கணக்கான விமான ஓட்டிகளை எந்த நாடாலும் எந்தவொரு நிறுவனத்தாலும் ஓரிரு மாதங்களிலோ அல்லது ஆண்டுகளிலோ ஆயத்தப்படுத்த முடியாது. அதுவும் ஏர் இந்தியா விமானிகள் தனித்தகுதி படைத்தவர்கள்; அதேபோன்றுதான் பணிப்பெண்கள் மற்றும் பிறப் பணியாளர்களும். இந்தியப் பயணிகளும் இந்திய மக்களும் ஏர் இந்தியா என்ற ஒரு வார்த்தைக்காக அதை நேசித்தார்கள்; அதனாலேயே விரும்பி பயணித்தார்கள்.
இந்திய அடையாளத்தைத் தாங்கி நின்ற இந்திய அரசின் ஒரே ஒரு விமான நிறுவனமும் இப்பொழுது விற்கப்பட்டுவிட்டது. ஒரு மிகப்பெரிய அரசாங்கத்தின் பின்புலத்தில் இயங்கி, பல பத்தாண்டுகள் இந்தியாவில் விமானப் பயணம் என்றாலே ஏர் இந்தியா/ இந்தியன் ஏர்லைன்ஸை தவிர வேறெதுவுமில்லை என்று ஏகபோகமாக இருந்த காலத்தில், அமைந்த வாய்ப்புகளையெல்லாம் பயன்படுத்தி அதை நிலைநிறுத்திக் கொள்ளாமல், மேல்மட்டத்தில் இருந்தவர்கள் திட்டமிட்டே அதைப் பலவீனப்படுத்தி, நட்டத்தில் தள்ளி, இன்று அதை விற்பனை செய்யும் அளவிற்கு சூழலை உருவாக்கி, அனைத்துப் பழிகளையும் அடிமட்டப் பணியாளர்கள் மீதே போட்டுவிட்டு அரசியல் அதிகாரத்தில் இருப்பவர்கள் தப்பிக்க நினைக்கிறார்கள்.
ஏறக்குறைய 70,000 கோடிக்கு மேல் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு கடன் ஏற்பட்டுவிட்டது என்றுக் கூறுகின்ற அதே நேரத்தில்,கொரோனா காலகட்டத்தைத் தவிர, பிற எல்லா காலகட்டத்திலும், நல்ல முறையில் இயங்கி வந்த ஏர் இந்தியா விமான நிறுவனம் நட்டத்தில் இயங்க நேர்ந்தது ஏன் என்பது குறித்து, கடந்த 20 ஆண்டுகளில் எந்த ஆட்சியிலும் ஏன் முறையான ஆய்வு மேற்கொள்ளப்படவில்லை? அதைக் களைவதற்குண்டான நடவடிக்கை ஏன் எடுக்கவில்லை?
மதிப்பிட முடியாத Branding (வணிகக் குறியீடு) கொண்ட ஏர் இந்தியா நிறுவனத்தை வெறும் ரூ.15,000 கோடிக்குத் தாரை வார்த்திருப்பதை எப்படித் தான் ஏற்றுக் கொள்ள முடியும்? ஏர் இந்தியா நிறுவனத்தின் ஒட்டுமொத்த அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் மதிப்பு சுமார் 450 பில்லியன்கள் இருக்கக் கூடும் என்று ஒரு தகவல் கூறுகிறது. அதாவது ஒரு பில்லியன் என்றால் 100 கோடி என்று அர்த்தம். மொத்த மதிப்பீடு ரூ.45,000 கோடி என்று ஒரு தகவல் கூறுகிறது.
எனவே ஒட்டுமொத்தத்தில் Air India மற்றும் Indian Airlines நிறுவனத்தின் மொத்த சொத்தின் மதிப்பீடு 1.5 இலட்சம் கோடிக்கு மேல் வரும். இதன் உண்மைத் தன்மை குறித்தும், வெறும் விமானங்கள் மட்டும் தான் டாடா நிறுவனத்திற்கு கைமாற்றப்பட்டிருக்கின்றனவா அல்லது மேற்குறிப்பிட்ட அனைத்து அசையும் மற்றும் அசையா சொத்துக்களும் சேர்த்து விற்கப்பட்டுள்ளனவா என்பதை மத்திய அரசு இந்திய மக்களுக்கு கண்டிப்பாக தெளிவுபடுத்த வேண்டும். கண்முன்னே நான்கைந்து விமானங்களை வாடகைக்கு ஓட்டும் நிறுவனங்கள் நான்கைந்து ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான விமானங்களை வாங்கி இயக்க முடிகிறதென்றால், ஓர் அரசு நிறுவனத்தால் ஏன் அதேபோன்று இயக்க இயலாது?
140 கோடி மக்களை ஆட்சி செய்யக்கூடிய ஓர் அரசால் 130 விமானங்களை இயக்க இயலாது என்று கூறுவது ஏற்புடையது அல்ல; ஏர் இந்தியா விமான நிறுவனத்தை அடிமாட்டு விலைக்கு விற்றதை இந்திய மக்கள் தங்களுடைய ஆன்மாவை விற்றதைப் போன்ற அவமான உணர்வுடன் பார்க்கிறார்கள்.
நட்டம் ஏன் ஏற்பட்டது என்பதைக் கண்டறியாமல், அந்த நிறுவனத்தையே தாரைவார்ப்பது ஒரு தவறான முன்னுதாரணமாக ஆகிடும் அல்லவா? இதையே முன்னுதாரணமாகக் கொண்டு, நாளை ஒவ்வொரு பொதுத்துறை நிறுவத்தையும் இதேபோன்று விற்க ஆரம்பித்தால் நாட்டின் கதி என்னவாகும். இந்திய மக்கள் எத்தனையோ நட்டத்தைத் தாங்கி இருக்கிறார்கள். ஆனால், இதுபோன்று இந்திய அடையாளத்தை விற்பதை அவர்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். ஏர் இந்திய விமான நிறுவன ஏலத்தை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.