உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்திற்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உ.பி. முதலமைச்சர் அலுவலகத்தில் பணியாற்றி வரும் சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, பாதுகாப்பு காரணங்களுக்காக தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டார்.
உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படும் நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் ஒரு லட்சத்து 85 ஆயிரத்து 248 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் சேர்த்து இந்தியாவில் மட்டும் மொத்தம் ஒரு கோடியே 38 லட்சத்து 71 ஆயிரத்து 321 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று மட்டும் கொரோனாவால் 1,026 பேர் பலியாகியுள்ள நிலையில், இதுவரை கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,72,115-யைக் கடந்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த வாரத்தை விட இந்த வாரம் தொற்று கண்டறியப்பட்டவர்களின் எண்ணிக்கை 281 சதவீதம் அதிகரித்துள்ளது. எனவே கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தப்படும் படி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்திற்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உ.பி. முதலமைச்சர் அலுவலகத்தில் பணியாற்றி வரும் சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, பாதுகாப்பு காரணங்களுக்காக தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்ட யோகி ஆதித்யநாத் “கொரோனா உறுதியான அதிகாரிகள் என்னுடன் தொடர்பில் இருந்ததால், தனிமைப்படுத்திக் கொண்டேன். அனைத்து பணிகளையும் மெய்நிகர் முறையில் துவங்க உள்ளேன்” என தெரிவித்தார்.
இதனிடையே கொரோனா பரிசோதனை மேற்கொண்ட யோகி ஆதித்யநாத்திற்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 5 மாநில தேர்தலை முன்னிட்டு தீவிர பிரச்சாரம் மேற்கொண்ட யோகி ஆதித்யநாத்திற்கு தொற்று உறுதி செய்யப்பட்டது பாஜக தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யோகி ஆதித்யநாத் கடந்த வாரம் லக்னோவில் உள்ள அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசிக்கான முதல் டோஸை எடுத்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.