
ஐந்து சவரன் நகை கடன் தள்ளுபடி கானல் நீரா..? சொல்வது ஒன்று, செய்வது ஒன்று, இதுதான் திமுகவின் வாடிக்கை என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி திமுகவை விமர்சித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன் முழு விவரம் பின்வருமாறு:- ஏச்சு பிழைக்கும் தொழிலே சரிதானா.? எண்ணிப் பாருங்க ஐயா எண்ணிப் பாருங்க என்று புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்கள் பாடிய பாடல்தான் நினைவுக்கு வருகின்றது. ஏமாற்றுவதற்கு ஆள் இருக்கின்ற வரை ஏமாற்றிக் கொண்டே இருக்கலாம் என்ற கொள்கையின் அடிப்படையில் திமுகவின் விடிய அரசு செயல்படுகிறது.
இந்த ஆட்சியின் 100 நாள் செயல்பாடுகளிலேயே ஏமாற்றம் அடைந்த மக்கள் விழிபிதுங்கி நிற்கிறார்கள்.நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 5 சவரன் வரை நகை கடன் தள்ளுபடி செய்வோம் என்று வாக்குறுதி அளித்தவர்கள், இப்போது பசப்பு வார்த்தைகளை பேசிகிறார்கள். தமிழக மாணவர்கள் வங்கிகளில் வாங்கிய உயர்கல்விக்கான கல்விக் கடனை ரத்து செய்வோம் என்று வாக்குறுதி அளித்து வாக்குகளை பெற்ற ஆட்சியாளர்கள், அதை சுத்தமாக மறந்து விட்டார்கள். தற்போது நடைபெற்று வரும் திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற பல்வேறு நிபந்தனைகளை விதிக்க இருப்பதாக செய்திகள் வருகின்றன. ஐந்து சவரன் நகை கடன் தள்ளுபடி சலுகை பலருக்கு கிடைக்க கூடாது என்று எண்ணும் அளவிற்கு நிபந்தனைகளை விதிக்க திமுக அரசின் கூட்டுறவுத்துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வருகின்றன.
கூட்டுறவு சங்கங்களில் நகை கடன் பெற்ற அனைவரும் கடன் ரத்தாகும் என்று மகிழ்ச்சி அடைந்த நிலையில் 2018 ஆம் ஆண்டு, ஏப்ரல் முதல் 2020ஆம் ஆண்டு வரை தரப்பட்ட நகை கடன்களை மட்டுமே தள்ளுபடி செய்வது என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாம். இதை செயல்படுத்துவதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என்றும், பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளன. நகை கடன் தள்ளுபடி பெற கடன் பெற்றவர் கூட்டுறவு சங்கங்களில் பயிர் கடன் பெற்றிருக்க கூடாது, மத்திய, மாநில அரசு ஊழியராக இருக்க கூடாது, வருமான வரி செலுத்துவோராக இருக்கக் கூடாது, ஆண்டு வருமானம் 1 லட்சத்திற்கு மேல் இருக்கக்கூடாது, கூட்டுறவு சங்கங்களில் பணிபுரிபவராக இருக்க கூடாது, குடும்பத்தில் ஒருவர் மட்டுமே கடன் பெற்றிருக்க வேண்டும் என்பது போன்ற பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்படவுள்ளதாக தெரிகிறது. இதனால் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று இந்த அரசு அறிவித்திருந்தாலும் நிபர்ந்தனைகளால் பலரால் கடன் தள்ளுபடி சலுகைபெற முடியாது.
கூட்டுறவு சங்க நிர்வாகிகள் மூலம் இவைகளை தெரிந்துகொண்ட மக்கள் கொதிப்படைந்து போயுள்ளனர், '' எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே. சத்தியம் தவறாத உத்தமர் போலவே நடிக்கிறார். சமயம் பார்த்துப் பல வழிகளில் " என்று புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் பாடியதைப் போல, இந்த அரசை மக்கள் குறை கூறத் தொடங்கியுள்ளனர். தமிழகத்தின் கடன் அளவு எவ்வளவு என்று தேர்தல் சமயத்தில் திமுகவின் தேர்தல் அறிக்கையிலேயே தெளிவாக கூறப்பட்டிருக்கிறது, இதையெல்லாம் அறிந்துதான் நிறைவேற்ற முடியாத 505 க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை திமுக தலைவர் அள்ளி வீசியிருக்கிறார். ஆனால் அதனை நிறைவேற்ற எண்ணம் இல்லாமல் நிதி அமைச்சர் அவர்களை வைத்து ஒரு வெள்ளை அறிக்கையை தாக்கல் செய்துள்ளனர். அந்த வெள்ளை அறிக்கையும் ஒவ்வொரு ஆண்டும், அம்மா அரசின் மாண்புமிகு நிதி அமைச்சர் அவர்கள் வெளியிட்ட நிதி அறிக்கையில் தொகுப்பாகவே உள்ளது. மேலும் இந்த நிதி அறிக்கையில் தமிழ்நாட்டின் கடன் எவ்வளவு உள்ளது என்று புதிதாக கண்டுபிடித்தது போலவும்,
இதனால் நல திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்த பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்படும் என்றும், அரசு ஊழியர்களுக்கு நாங்கள்தான் பாதுகாப்பு என்றும் கூறிக்கொள்ளும் திமுக, அவர்களது பணப் பயனில் கை வைப்பதும், தேர்தல் அறிவிப்புகளில் ஒன்றிரண்டை நிறைவேற்றுவதாக கூறி, அதிலும் புதிய புதிய நிபந்தனைகளை விதித்து, பயனாளிகளின் எண்ணிக்கையை பெருமளவு குறைக்க திட்டமிட்டுள்ளதும் உள்ளங்கை நெல்லிக்கனி போல் தெளிவாக தெரிகிறது.
திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை நம்பி வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் இனியும் ஏமாறாமல், அவர்கள் விழிப்படைந்து போராட்ட களத்தில் குதிப்பதற்கு முன்பு அதிர்ஷ்ட வசத்தால் ஆட்சிக்கு வந்த இந்த அரசு, தன்னை திருத்திக் கொள்ள வேண்டும். கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க்கடன் களையும் மற்றும் 5 பவுன் நகையை அடமானம் வைத்து நகை கடன் பெற்றவர்களுடைய நகைகளையும் உடனடியாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.