
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட சிறிய மசூதி, தர்கா, கோயில், தேவாலயங்கள் வரும் 10 ஆம் தேதி முதல் செயல்பட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் முழு விவரம்:- மாண்புமிகு அம்மாவின் அரசு கொரோனா தொற்றில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க அவர்களுக்கு தேவையான தடுப்பு நடவடிக்கைகளை எடுத்தும், சிகிச்சைகளை அளித்தும்,நிவாரணங்களை வழங்கியும், முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. நோய் தொற்றின் போக்கு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு பொதுமக்களின் ஒத்துழைப்பையும், நோய்த் தொற்றின் நிலையையும் கருத்தில் கொண்டு ஊரடங்களில் படிப்படியாக தளர்வு வழங்கப்பட்டு வருகிறது.
ஏற்கனவே ஊராட்சி, பேரூராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் உள்ள சிறிய திருக்கோயில்கள், சிறிய மசூதிகள், தர்காக்கள், தேவாலயங்கள் ஆகிய வழிபாட்டு தலங்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவரின் அனுமதியுடன் பொதுமக்கள் தரிசனம் அனுமதிக்கப்பட்டுள்ளது. அரசு ஏற்கனவே வெளியிட்டுள்ள நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி தற்போது மாநகராட்சி பகுதிகளில் உள்ள சிறிய திருக்கோயில்கள், அதாவது 10,000 ரூபாய்க்கும் குறைவாக ஆண்டு வருமானம் உள்ள திருக்கோயில்களிலும், சிறிய மசூதிகளிலும், தர்காக்கள் எனும் தேவாலயங்களிலும், மாவட்ட ஆட்சித் தலைவர்களின் அனுமதியுடன் 10-8-2020 முதல் பொதுமக்கள் தரிசனம் அனுமதிக்கப்படுகிறது.
சென்னை மாநகராட்சி பகுதியில் இதற்கான அனுமதியை சென்னை மாநகராட்சி ஆணையரிடம் தர வேண்டும், மற்ற மாநகராட்சி பகுதிகளில் இதற்கான அனுமதியை சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித்தலைவரிடம்பெற வேண்டும். அரசு வெளியிடும் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை, (standard operative procedure) பின்பற்றி தமிழ்நாடு முழுவதும் ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகள் 10-8-2020 முதல் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்த அரசின் நிலையான வழிகாட்டு முறைகளை பொதுமக்கள் கடைபிடிக்கவும், ஒத்துழைப்பு வழங்கவும், பொதுமக்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.